இறை நம்பிக்கைக்கு வலுவூட்டும் நோன்புப் பெருநாளை குடும்பத்துடன் கூடி கொண்டாடுவதே மகிழ்ச்சி என்கின்றனர் வர்த்தக நிறுவனமான ராயல் கிங்ஸ் குழுமத்தின் குடும்பத்தினர்.
சிறு வயதில் தாய் தந்தையுடன் மட்டுமே பெருநாளைக் கொண்டாடி வந்த தனக்கு பெற்றோர், மனைவி, இரு மகன்கள், ஒரு மகள் என எழுவர் கொண்ட குடும்பமாக இத்திருநாளை ஒன்றிணைந்து கொண்டாடுவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருவதாகக் கூறினார் ராயல் கிங்ஸ் இயக்குநர் திரு சிராஜுதீன் செய்யது முஹம்மது, 45.
பெருநாள் காலைப்பொழுதை தொழுகையில் தொடங்கி பிறகு பள்ளிவாசல் தொழுகையில் கலந்துகொண்ட பின் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் என அனைவருடனும் இணைந்து விருந்து உண்டு மகிழ்வது ஒவ்வோர் ஆண்டும் மனநிறைவைத் தரும் என்றார் திரு சிராஜுதீன்.
“இறைவனின் அருளால் இன்று உலகம் நெருக்கடி காலத்திலிருந்து மீண்டு வந்திருப்பது நிம்மதியளிக்கிறது,” என்று கூறினார் சிராஜுதீனின் தந்தை திரு செய்யது முஹம்மது, 79.
உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் சமமானது எனும் புரிதலையும் உணவின் மதிப்பையும் இந்நோன்பு காலத்தில் ஒவ்வொரு முஸ்லிம் அன்பரும் உணர்வர். நோன்பு கடைப்பிடிக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் அமைதியும் பொறுமையும் குடிகொண்டு நற்பாதையில் வாழ்க்கையை வழிநடத்த ஒவ்வோர் ஆண்டும் இந்நோன்பு மாதம் அடித்தளமிடுகிறது என்றும் திரு செய்யது முஹம்மது பகிர்ந்துகொண்டார்.
மேலும் 9 வயதிலிருந்து பிள்ளைகளையும் நோன்பு சமயமுறைக்கு பழக்குவது மிகச்சிறந்தது என்றும் இளம்வயதிலேயே நற்பண்புகளை விதைப்பது எதிர்கால தலைமுறை செழிப்புடன் வாழ வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.
சிராஜுதீனின் பாட்டனார் காலத்திலிருந்து சிங்கப்பூரில் பல்வேறு தொழில்கள் செய்து வந்துள்ள இக்குடும்பத்தினர், நோன்பு காலத்தில் பொருளியல் சிரமத்தை எதிர்நோக்குவோருக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இவ்வாண்டு 250 குடும்பங்களுக்கு நிறுவனத்தின் சார்பில் தலா 5 கிலோ அரிசி வழங்கியுள்ளனர்.