சிங்கப்பூரில் அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கு இடமில்லை என்பதை துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங்கும் ஒருசேரத் தெரிவித்து உள்ளனர்.
மக்களைக் கவரும் அரசியல் போக்கிற்கும் இங்கு இடமில்லை என நாடாளுமன்றத்தில் அதிபர் உரைமீதான ஐந்து நாள் விவாதத்திற்குப் பிறகு இவ்விருவரும் ஒப்புக்கொண்டனர்.
இதற்கு முன்னர், கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய திரு வோங், எதிர்க்கட்சியான பாட்டாளிக் கட்சி அரசாங்கத்தின் வருவாயை உயர்த்த பயனுள்ள மாற்று யோசனைகளைத் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
அதேநேரம், அரசாங்கம் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையைக் குறைக்கும் வகையில், மக்களைக் கவரும் விதத்தில் யோசனைகளைத் தெரிவிப்பதிலும் சந்தர்ப்பாவத அரசியல் செய்வதிலும் அக்கட்சி ஈடுபடக்கூடாது என்றும் அவர் கூறியிருந்தார்.
அவரது அந்தக் கருத்துக்கு எதிர்க்கட்சித் தலைவரும் அல்ஜுனிட் குழுத்தொகுதி உறுப்பினருமான பிரித்தம் சிங் நேற்று நாடாளுமன்றத்தில் பதிலளித்துப் பேசினார்.
மக்களைக் கவரும் வகையிலும் உண்மைக்கு மாறான நிலையிலும் பாட்டாளிக் கட்சி செயல்பட்டிருந்தால் அதன் மாற்று யோசனைகள் சிலவற்றை அரசாங்கம் பரிசீலித்திருக்காது என்று திரு சிங் கூறினார்.
உதாரணமாக, பாரபட்சத்திற்கு எதிரான சட்ட மசோதா, குறைந்தபட்ச ஊதியம் மற்றும் காப்பீடு தொடர்பான பாட்டாளிக் கட்சியின் மாற்று யோசனைகள் பரிசீலிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அப்போது பேசிய திரு வோங், பாட்டாளிக் கட்சியின் யோசனைகள் வகைப்படுத்தும் விதத்தை தானோ திரு சிங்கோ ஏற்றுக்கொள்கிறோமா இல்லையா என்பதைத் தெரிவிக்க வேண்டி வரலாம் என்றார்.
மேலும், சிங்கப்பூரில் ஜனநாயகம் உருவெடுத்த விதம் குறித்து திரு வோங் விரிவாக எடுத்துரைத்தார். அதேநேரம் முன்னேறிய ஜனநாயக நாடுகளில்கூட பிளவு ஏற்பட்டது குறித்து தாம் வருந்துவதாகவும் திரு வோங் கூறினார்.
“பல நாடுகளில் மக்களைக் கவரும் அறிவிப்புகளே அடிப்படையாக உள்ளன. அதேநேரம் அந்தப் போக்கு அந்நாடுகளின் சமூகங்களை வெகுவாகப் பாதித்திருப்பதையும் இருவேறு கருத்துகளால் சமூகங்கள் பிளவுபட்டிருப்பதையும் நீங்கள் அறியக்கூடும்.
“மக்களைக் கவர்வது என்பது உண்மையைச் சிதைத்து அரசியல் லாபம் பெறக்கூடியது. இந்தப் போக்கு நீடித்தால் சிங்கப்பூரை அது பாதிக்கும்,” என்று திரு வோங் விளக்கினார்.
கொள்கைகளை வகுக்கும்போது மக்களைக் கவர்வதில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும் நேர்மையையும் ஒருமைப்பாட்டையும் கடைப்பிடிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்றும் துணைப் பிரதமர் வோங் கூறினார்.
“இந்தத் தரநிலைகளை அரசாங்கம் கடைப்பிடிக்கத் தவறினால் அது குறித்து கேள்வி எழுப்ப எதிர்த்தரப்புக்கு வாய்ப்பு கிடைக்கும்.
“அதேபோல, எதிர்க்கட்சி தெரிவிக்கும் யோசனைகளும் கொள்கைகளும் மக்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் இருந்தால் அது குறித்து அரசாங்கம் கவலைகொள்ளும்,” என்றார் திரு வோங்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள ஆளும் தரப்பும் எதிர்த்தரப்பும் முதிர்ச்சியான ஜனநாயகத்தைக் கட்டிக்காக்க வேண்டும். இதனை மட்டுமே நாம் விரும்ப வேண்டும். அதேநேரம் ஜனரஞ்சகப் போக்கும் சந்தர்ப்பவாத அரசியலும் சிங்கப்பூரிலும் இந்த மன்றத்திலும் வேரூன்றுவதை எதிர்ப்போம்,” என்று திரு வோங் திட்டவட்டமாகக் கூறினார்.
அவரது கருத்தை ஏற்றுக்கொண்ட திரு சிங், “எதிர்க்கட்சியான பாட்டாளிக் கட்சி மக்கள்மீது அக்கறை கொண்டிருப்பதைத் தொடரும் என்பதோடு சிங்கப்பூரின், சிங்கப்பூரர்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும்,” என்று கூறினார்.
“அரசாங்கம் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கும் வகையில் பாட்டாளிக் கட்சி சந்தர்ப்பவாத அரசியல் நடத்துவதாகக் குறைகூறவும் அந்தக் கட்சியைத் தாக்கவும் அதிபர் உரை மீதான தமது விவாதத்தை திரு வோங் பயன்படுத்துவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இது ஒரு நியாயமற்ற குற்றச்சாட்டு. கருத்துகளையும் யோசனைகளையும் தெரிவிக்கும் முக்கிய தளமாக நமது நாடாளுமன்ற ஜனநாயகம் இருப்பதை இந்தக் குற்றச்சாட்டு பாதிக்கும்,” என்றும் திரு சிங் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒருமித்த குரல்