சிங்கப்பூர் வெற்றியுடன் திகழ உலகிற்குத் திறந்த, பொருத்தமாக, பயனுள்ள நாடாக இருப்பது அவசியம்.
சிங்கப்பூர் தனது பொருளியலை வளர்க்கும் நிலையிலும் மூப்படையும் மக்கள்தொகை போன்ற சவால்களை எதிர்கொள்ளும் நிலையிலும் இவற்றைக் கடைப்பிடிப்பது இன்றியமையாதது என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார்.
போட்டிகள் நிறைந்த யுகத்தில் திறந்த நாடாகத் தொடருவது புதிய நன்மதிப்புகளைப் பெற உதவுவதோடு சிங்கப்பூர் அதன் திறன்களை வலுப்படுத்தவும் கைகொடுக்கும் என்றார் அவர்.
அதிபர் உரைமீதான விவாதத்தில் பங்கேற்று நேற்று திரு ஹெங் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
உலகிற்குப் பொருந்தக்கூடிய வகையில் தங்களால் எந்த வகையில் சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதில் சிங்கப்பூரர்கள் கவனம் செலுத்துமாறு அப்போது அவர் வலியுறுத்தினார்.
“நமது நற்பண்புக் கூறு என்பது பொருளியலையும் கலாசாரத்தையும் இணைக்கக்கூடியது. இதனை நாம் மேலும் வலுப்படுத்த வேண்டும்.
“திறந்த மனநிலையோடு சிங்கப்பூரின் நிலையான சூழலும் வலுவான அரசு நிர்வாகமும் இன்னலைச் சந்திக்கும் இன்றைய உலகில் தனித்துவமாகப் பிரதிபலிக்கிறது.
“பலதரப்பட்ட வளங்களிலிருந்து திறன்களை ஈர்ப்பதில் சிங்கப்பூரர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
“வெளிப்புறத்தை துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டும். அத்துடன், இங்கு படிக்கும், பணியாற்றும் வெளிநாட்டினருடன் ஒருங்கிணைய வேண்டும்,” என்று திரு ஹெங் விளக்கினார்.