இன்னும் பத்து நாள்களில் முதுகலைப் பட்டம் பெறவிருந்த 24 வயது இந்திய மாணவர் ஒருவர் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த சையேஷ் வீரா (படம்) என்னும் அந்த இளையர், படித்துக்கொண்டே அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்திலுள்ள கொலம்பஸ் நகரில் பகுதி நேரமாக எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வேலை செய்துகொண்டு இருந்தார்.
அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு நேற்று முன்தினம் வந்த மர்ம நபர்கள் சிலர், அந்த இளையரை நோக்கி சரமாரியாகச் சுட்டுவிட்டு தப்பி ஓடியதாக நம்பப்படுகிறது. அது கொள்ளைக் கும்பலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இன்னும் இரண்டு வாரத்தில் பகுதிநேர வேலையைக் கைவிட நினைத்திருந்த நேரத்தில் அந்த இளையருக்கு இந்த கதி நேர்ந்திருப்பதாக வீராவின் நெருங்கிய தோழரான புனித் ரகுபதி, உள்ளூர் ஊடகங்களிடம் கூறினார்.