அனுஷா செல்வமணி
பள்ளிவாசல்களில் தொழுகை, உற்றார் உறவினர்களுடன் சந்திப்பு என்று சிங்கப்பூரில் உள்ள முஸ்லிம்கள் நேற்று நோன்புப் பெருநாளைக் கொண்டாடி மகிழ்ந்தனர். கொவிட்-19 கிருமித்தொற்றினால் 2020லிருந்து நடப்பிலிருந்த தொழுகைக்கு முதல்நாள் பதிவு செய்ய வேண்டியது உள்ளிட்ட பலவித கட்டுப்பாடுகள் நீங்கியதில் சிறுவர்கள் முதல் வெளிநாட்டு ஊழியர்கள்வரை அனைவரும் நிம்மதியோடும் மகிழ்ச்சியுடனும் காணப்பட்டனர்.
நாடெங்கும் உள்ள பள்ளிவாசல்கள், சிறப்பு தொழுகை இடங்களுக்குச் சென்று ஆயிரக்கணக்கானோர் தொழுதனர். இந்த ஆண்டு கிட்டத்தட்ட 240,000 தொழுகை இடங்கள் வழங்கப்பட்டதாக முயிஸ் எனப்படும் இஸ்லாமிய சமய மன்றம் தெரிவித்தது. 2022ல் இது 153,250 ஆக இருந்தது. இதில், கிட்டத்தட்ட 230,000 இடங்கள் 68 பள்ளி வாசல்களில் இருந்தன. கூடைப்பந்து மைதானம் போன்ற வீடமைப்புப் பேட்டைகளிலுள்ள பொது இடங்களில் ஏறக்குறைய 10,000 இடங்கள் வழங்கப்பட்டன.
அல்-முத்தாகின் பள்ளிவாசலுக்கு தொழுகைக்குச் சென்ற முஸ்லிம் விவகாரங்களுக்கான அமைச்சர் மசகோஸ் சுல்கிஃப்லி, அதிகமான தொழுகை இடங்கள், எதிர்பார்க்கப்பட்ட கூட்டத்தைச் சமாளிக்க உதவியதுடன் முதியோர், வெளிநாட்டு ஊழியர் என பல்வேறு குழுக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் உதவியாக இருந்தது என்று கூறினார்.
தொழுகைக் கூட்டங்கள் ஒழுங்குமுறைப்படி நடந்தேறின என்றார் அவர்.
டன்லப் ஸ்திரீட் அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் நாள் முழு வதும் ஏறக்குறைய 2,500 முஸ்லிம்கள் தொழுகைகளில் பங்கேற்றனர்.
“முஸ்லிம்கள் புத்துணர்ச்சியுடன் மீண்டும் பள்ளிவாசல்களுக்கு வந்து தொழுகை செய்ய முடிந்தது மகிழ்ச்சிக்குரியது. கடந்த ஈராண்டுகளைவிட இவ்வாண்டு 1,000க்கும் அதிகமா னோர் வந்துள்ளனர்,” என்றார் அப்துல் கஃபூர் பள்ளிவாசல் மேலாளர் திரு முஹம்மது இத்ரீஸ்.
அப்துல் கஃபூர் பள்ளிவாசலுக்கு கடந்த 45 ஆண்டுகளாக செல்லும் வணிகர் அப்துல் ஷாஃபி, 62, “இந்த ஆண்டு முழுமையான சுதந்திரத்தோடு தொழுது நண்பர்களைக் காண முடிந்தது,” என பூரித்தார்.
கிருமித்தொற்றுச் சூழலில் குடும்பத்தினரைப் பிரிந்து, தங்கு விடுதிகளில் தொழுது வந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு பள்ளிவாசல் சென்று தொழுகை செய்து நண்பர்களைக் காண முடிந்ததில் மகிழ்ச்சி.
பங்ளாதேஷ் ஊழியர்கள் பலர் நேற்று பிற்பகலில் சிராங்கூன் சாலை, அங்கூலியா பள்ளிவாசல் அருகில் திரண்டிருந்தனர்.
கடந்த 17 ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணியாற்றி வரும் முஹம்மது அலி ஹொசைன், 54, “இந்தாண்டு பெருநாள் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. கிருமித்தொற்றுக்குப் பிறகு பள்ளிவாசலுக்கு வந்து தொழுததுடன், என் இரு மகன்களும் இப்போது சிங்கப்பூரில் பணிபுரிவதால் குடும்பத்தோடு பெருநாள் கொண்டாடினேன்,” என்றார்.
கட்டுமானத் துறையில் பணிபுரியும் 38 வயது சுமோன், “இதற்கு முன்னர் பள்ளிவாசலுக்குச் செல்ல முடியாமல் நான் தங்கும் பெஞ்சூரு விடுதியில் தொழுது வந்தேன். நேற்று காலை எட்டு மணிக்கே பள்ளிவாசலுக்கு வந்து என் நண்பர்களைச் சந்தித்து நிம்மதியாக தொழுதேன்,” என்று கூறினார்.