சிங்கப்பூரின் டெலியோஸ்-2 எனும் செயற்கைக் கோளை ஏந்திக்கொண்டு நேற்று விண்ணில் சீறிப்பாய்ந்த இந்தியாவின் பி.எஸ்.எல்.வி.சி-55 உந்துகணையின் பயணம் வெற்றிகரமாக அமைந்தது.
இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து உந்துகணை விண்ணில் ஏவப்பட்டது. டெலியோஸ்-2 செயற்கைக் கோளுடன் 16 கிலோ எடை கொண்ட ‘லுமிலைட்-4’ என்ற சிறிய செயற்கைக்கோளும் விண்ணில் ஏவப்பட்டது.
நேற்று மதியம் இரண்டு செயற்கைக் கோள்களையும் வெற்றிகரமாக குறிப்பிட்ட பூமி வட்டப்பாதையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலைநிறுத்தினர்.
இதற்கு முன்னர் 2015ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி டெலியோஸ்-1 செயற்கைக்கோளை பி.எஸ்.எல்.வி. சி-29 எனும் உந்துகணை மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.
டெலியோஸ்-2 செயற்கைக்கோள் மூலம் புவி ஆய்வு, இயற்கை பேரிடர் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற முடியும்.