கடன்சுமை கட்டுக்குள் இருப்பதாக வங்கிகள் தகவல்
பயனீட்டாளர்கள் தங்களது கடன்பற்று அட்டைகள் மூலம் கூடுதலாகச் செலவு செய்கின்றனர் என்றும் இந்தப் போக்கு இவ்வாண்டு தொடரக்கூடும் என்றும் சந்தைக் கவனிப்பாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
செலவு செய்வது, கொவிட்-19 பெருந்தொற்றுக்கு முன்பிருந்த நிலைக்கு அல்லது அப்போது இருந்த அளவையும் விஞ்சிவிட்டதாக சிட்டிபேங்க், யுஓபி உள்ளிட்ட சில வங்கிகள் தெரிவித்தன.
2021ஐ விட கடந்த ஆண்டு கடன் அட்டைகள் மூலம் பயனீட்டாளர்கள் செலவு செய்தது கூடியதாக டிபிஎஸ், ஓசிபிசி போன்ற மற்ற வங்கிகள் கூறின.
பொருளியல் மெதுவடைந்து வரும் வேளையிலும் வட்டி விகி பல ஆண்டுகளில் காணப்படாத அளவுக்கு உச்சம் தொட்டிருக்கும் நிலையிலும், கடன் அட்டைகள் மூலம் செலவு செய்வது கூடியிருப்பது, கடன் அட்டையால் கடன்சுமை அதிகரிப்பது குறித்த அக்கறையை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை நிலவரம் கட்டுக்குள் இருப்பதாக சந்தைக் கவனிப்பாளர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினர். கடன் தொகையைச் செலுத்தாத விகிதம் குறைவாக இருப்பதாகவும் கடன்சுமையில் சிக்குவதில் இருந்து பயனீட்டாளர்களைப் பாதுகாக்கவும் நடைமுறைகள் நடப்பில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
நாடுகள் தங்களது எல்லைகளை மீண்டும் திறந்ததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு வர்த்தக நிலவரம் படிப்படியாக மேம்பட்டது. இதனால், விட்டதைப் பிடிக்க பயனீட்டாளர்கள் தாராளமாக செலவு செய்து வருகின்றனர்.
2019ஐ விட கடந்த ஆண்டு செலவு செய்தது ஏறக்குறைய 30 விழுக்காடு கூடியதாக சிட்டிபேங்க் சிங்கப்பூரின் கடன் அட்டைகள், தனிநபர் கடன் பிரிவுத் தலைவரான திருவாட்டி ரெஜினா லிம் தெரிவித்தார்.
சிட்டிபேங்க் வாடிக்கையாளர்கள் இவ்வாண்டும் செலவு செய்வதைக் குறைக்கவில்லை என்றார் அவர். 2019 முதலாம் காலாண்டுடன் ஒப்புநோக்க, இவ்வாண்டின் அதே காலட்டத்தில் செலவு செய்தது 35 விழுக்காடு கூடியதாக அவர் சொன்னார்.
“பயணம் செய்யவும் கடைகளில் சாப்பிடவும் நகை, கைக்கடிகாரம் முதல் துணிமணிகள்வரை வாங்கவும் மக்கள் விரும்புகின்றனர்,” என்றார் அவர்.
கடந்த ஆண்டு கடன் அட்டைகள் மூலம் செலவு செய்வது கொவிட்-19 பெருந்தொற்றுக்கு முன்பிருந்த நிலையை எட்டத் தொடங்கியதாகவும் ஆண்டின் நான்காவது காலாண்டில் செலவினம் வேகமாக அதிகரித்ததாகவும் யுஓபி வங்கியின் தனிநபர் நிதிச் சேவை பிரிவுத் தலைவர் ஜாக்குலின் டான் தெரிவித்தார்.
உணவு பானம், வெளிநாட்டுப் பயணம், வெளிநாட்டில் தங்குமிடச் செலவு, காப்புறுதி ஆகிய பிரிவுகளில் பயனீட்டாளர்கள் அதிகம் செலவு செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, பணவசதி உள்ளவர்களிடையே வெளிநாட்டுப் பயணம் தொடர்பிலான செலவினம் அதிகரிக்கும் என யுஓபி எதிர்பார்க்கிறது.
இதற்கிடையே, 2021ஐ விட கடந்த ஆண்டு கடன் அட்டை கட்டணங்கள் 20 விழுக்காட்டிற்குமேல் கூடியதாக டிபிஎஸ் வங்கி தெரிவித்தது.
மக்கள் அதிகமானோர் பயணம் செய்வதாலும் உணவகங்களில் குடும்பமாகச் சாப்பிடுவதாலும் கடன் அட்டைகளில் செலவு செய்வது அதிகரித்து இருப்பதாக அவ்வங்கியின் கட்டணங்கள், தளங்கள் பிரிவுத் தலைவர் ஆண்டனி சியாவ் தெரிவித்தார்.
போக்குவரத்திலும் (40% வளர்ச்சி) இணையத்தில் பொருள் வாங்குவதிலும் (20%க்கு மேல் வளர்ச்சி) பயனீட்டாளர்கள் செலவு செய்ததாகவும் அவர் கூறினார்.
ஓசிபிசி வங்கியைப் பொறுத்தமட்டில், பெருந்தொற்றில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் கடன் அட்டை செலவினம் அதிகரித்து வருகிறது.
2021ஐ விட கடந்த ஆண்டு தம் வாடிக்கையாளர்கள் கடன்அட்டைகளில் 16 விழுக்காடு கூடுதலாக செலவு செய்ததாக அவ்வங்கியின் கடன் வழங்கும் பிரிவுத் தலைவர் கென்னத் டான் தெரிவித்தார்.
சிட்டிபேங்க், யுஓபி, டிபிஎஸ் வங்கிகளைப்போலவே கடன்அட்டைகளில் செலவு செய்வது இவ்வாண்டு தொடர்ந்து அதிகரிக்கும் என ஓசிபிசி எதிர்பார்க்கிறது.