ஒரு மாத காலத்துக்கும் மேலாகத் தேடப்பட்டு வந்த சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் அம்ரித்பால் சிங்கை இந்தியக் காவல்துறையினர் கைது செய்து உள்ளதாக பஞ்சாப் மாநில காவல்துறை அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.
பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பஞ்சாப் மாநிலத்தில் சொந்த நாடு கோரிய இயக்கத்திற்கு எதிராக இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றது.
பஞ்சாப்பில் அம்ரித்பால் சிங்கின் எழுச்சியால் சீக்கியர்களுக்கு காலிஸ்தானை தனி நாடாகக் கோரும் பேச்சு எழுந்து உள்ளது.
அத்துடன், 1980கள் மற்றும் 1990களின் தொடக்கத்தில் சீக்கிய கிளர்ச்சியின்போது பல்லாயிரக்கணக்கானோரின் உயிர்களைப் பறித்த வன்முறை மீண்டும் நிகழுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
பஞ்சாப் காவல்துறை உயர் அதிகாரியான திரு சுக்செயின் சிங் கில், “உளவுத்துறையின் அடிப்படையில் பஞ்சாப் மாநிலம், மோகா மாவட்டத்தில் உள்ள ரோட் கிராமத்தில் அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டார்,” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
‘வாரிஸ் பஞ்சாப் டி’ எனும் அமைப்பை வழிநடத்தும் அம்ரித்பால் சிங், 30, கடந்த மார்ச் மாத நடுப்பகுதியிலிருந்து தலைமறைவாக இருந்தார்.
அவரும் அவரின் ஆதரவாளர்களில் நூற்றுக்கணக்கானோரும் கடந்த மாதம் துப்பாக்கிகள், வாள்களுடன் பஞ்சாப் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, அம்ரித்பால் சிங்கின் உதவியாளர்களில் ஒருவரை விடுவிக்கக் கோரினர்.
கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் சட்ட அமலாக்கத்திற்கு இடையூறாகச் செயல்பட்டதாகவும் ஒற்றுமையைச் சீர்குலைக்க முற்பட்டதாகவும் அம்ரித்பால் சிங் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மீது காவல்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், ரோட் கிராமத்தில் உள்ள சீக்கிய கோயிலில் அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டாக திரு கில் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்புக்கு மிரட்டலாக விளங்குவோரை ஓராண்டு வரை குற்றம் சுமத்தாமல் தடுப்புக்காவலில் வைத்திருக்க இச்சட்டம் வகைசெய்கிறது.
அசாம் மாநிலம், திப்ருகாருக்கு அம்ரித்பால் சிங் இடமாற்றம் செய்யப்படுவார் என்று திரு கில் தெரிவித்தார். அம்ரித்பால் சிங்கின் உதவியாளர்களில் சிலர், அங்கு ஏற்கெனவே சிறையில் அடைக்கப்பட்டுவிட்டனர்.
அம்ரித்பால் சிங் மீது 16 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, பஞ்சாப் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் பொய்யான, உறுதி செய்யப்படாத தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்ப வேண்டாம் என்றும் பஞ்சாப் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.