மோதல்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் இருந்து இந்திய நாட்டவர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டுக் குடிமக்களை தான் வெளியேற்றியுள்ளதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது.
சவூதி வெளியுறவு அமைச்சு அறிவிப்பின்படி, அந்த நாடுகளைச் சேர்ந்த 66 குடிமக்கள் நேற்று முன்தினம் வெளியேற்றப்பட்டனர்.
இந்தியா, பாகிஸ்தான், பங்ளாதேஷ், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுடன் 91 சவூதி நாட்டவர்களும் வெளியேற்றப்பட்டதாகவும் சவூதி வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
அரச சவூதி கடற்படையும் சவூதி ராணுவமும் சேர்ந்து மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டன. இந்த விவகாரத்தில் சவூதியுடன் இந்தியா தொடர்பில் இருந்து வருகிறது.
இந்திய நாட்டவர்கள் சூடானில் இருந்து மீட்கப்படுவதை உறுதிசெய்ய சவூதி வெளியுறவு அமைச்சரை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தொலைபேசியில் அழைத்துப் பேசினார்.
சூடானில் ஏறக்குறைய 3,000 இந்திய நாட்டவர்கள் இருப்பதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் தலைநகர் கார்ட்டூமில் வசிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு சூடானில் மோதல்கள் நிகழும் டார்ஃபர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் இந்தியர்கள் உள்ளனர்.
சூடான் ராணுவப் படைகளுக்கும் துணை ராணவப் படையான ‘ஆர்எஸ்எஃப்’க்கும் இடையே கடந்த ஒருவார காலமாக மோதல் இடம்பெற்று வரும் நிலையில், குடிமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றிய முதல் நாடாக சவூதி அரேபியா விளங்குகிறது.
இதற்கிடையே, சூடானில் இருந்து தனது தூதரக ஊழியர்களை வெளியேற்றியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அரசதந்திரகளை தான் வெளியேற்றி வருவதாக பிரான்ஸ் கூறியது.
கார்ட்டூமில் உள்ள தனது தூதரகத்தில் செயல்பாடுகளை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகக் கூறிய அந்நாட்டு அதிபர் ஜோ பைடன், ஆனாலும் சூடான் மக்களுக்கு உதவ அமெரிக்கா தொடர்ந்து கடப்பாடு கொண்டிருப்பதாகச் சொன்னார்.
சூடானில் சண்டை நிறுத்தத்திற்கு அவர் அழைப்பு விடுத்தபோதிலும், சூடான் ராணுவப் படைகள் அதற்கு இதுவரை செவிசாய்க்கவில்லை.