முன்னோடி, மெர்டேக்கா தலைமுறை சிங்கப்பூரர்களுக்கு ஜூலையில் கிடைக்கும்
முன்னோடி, மெர்டேக்கா தலைமுறையைச் சேர்ந்த சிங்கப்பூரர்களுக்கு ஜூலையில் 200 வெள்ளி முதல் 1,100 வெள்ளி வரை மெடிசேவ் தொகை நிரப்பப்படுகிறது.
இதனால் அரசாங்கத்துக்கு $254 மில்லியன் செலவு ஏற்படும். ஆனால் இது, 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட செலவைவிட குறைவு என்று நிதி அமைச்சும் சுகாதார அமைச்சும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன.
மெடிஷீல்ட் லைஃப், கேர்ஷீல்ட் லைஃப் மற்றும் இதர மெடிசேவ் அங்கீகரித்த காப்புறுதித் திட்டங்கள், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதற்கான செலவுகள், பகல் நேர அறுவை சிகிச்சை, அங்கீகரிக்கப்பட்ட வெளிநோயாளி சிகிச்சை ஆகியவற்றுக்கு மெடிசேவில் நிரப்பப்படும் பணத்தைப் பயன்படுத்த முடியும்.
1945க்கும் 1949க்கும் இடையே பிறந்த சிங்கப்பூரர்களுக்கு $250 வழங்கப்படும். 1940ஆம் ஆண்டு முதல் 1944ஆம் ஆண்டு வரை பிறந்தவர்களுக்கு $500 கிடைக்கும். 1935ஆம் ஆண்டுக்கும் 1939ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர் களுக்கு $700 வழங்கப்படும். 1934ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்பு பிறந்தவர்களுக்கு $900 வழங்கப்படும்.
மெடிஷீல்ட் லைஃப் சந்தாக் கட்டண அதிகரிப்பின் சுமையைக் குறைப்பதற்காக 2023இல் 84 வயதான அல்லது மேற்பட்ட வயதுடைய (84 முதல் 88 வரையில் உள்ளவர்கள்) ஏற்கெனவே கடுமையான நோய்க்கு ஆளான சிங்கப்பூரர்களுக்கு கூடுதலாக 50 வெள்ளியும் 88 வயதுக்கு மேற்பட்டவர் களுக்கு கூடுதலாக 200 வெள்ளியும் 2025ஆம் ஆண்டு வரை வழங்கப்படும்.
நாட்டின் ஆரம்பக்காலத்தில் பங்களித்த சிங்கப்பூரர்களுக்கு நன்றி தெரிவித்து கௌரவிப்பதற்காக 2014ஆம் ஆண்டில் முன்னோடித் தலைமுறைத் தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
இவ்வாண்டு, அத்தலைமுறையினருக்கு நிரப்பப்படும் தொகையின் மதிப்பு 160 மில்லியன் வெள்ளியாகும். இத்தொகை 2023ஆம் ஆண்டில் 89 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் மெடிஷீல்ட் சந்தாக் கட்டணத்தை முழுமையாக செலுத்த உதவும். இளைய முன்னோடித் தலைமுறையைச் சேர்ந்தவர்களில் மூன்றில் இரண்டு விழுக்காட்டினர் இதன் மூலம் முழு சந்தாக் கட்டணத்தைக் கட்ட முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
2019ஆம் ஆண்டில் மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்பு அறிமுகம் செய்யப்பட்டது. 1950 முதல் 1959 வரை பிறந்தவர்களை துடிப்புடனும் ஆரோக்கியத்துடனும் இருப்பதை ஊக்குவிக்கவும் அவர்களின் சுகாதாரச் செலவுகளுக்கு அதிகளவு உத்தரவாதம் வழங்கவும் இந்தத் தொகுப்பு அறிமுகமானது.
இந்தத் தொகுப்புக்குத் தகுதி பெறு பவர்களின் மெடிசேவ் கணக்கில் ஆண்டு தோறும் 2019 முதல் 2023 வரை ஐந்து ஆண்டுகளுக்கு $200 நிரப்பப்படுகிறது.
மெர்டேக்கா தலைமுறையினருக்கு இவ்வாண்டு மெடிசேவ் கணக்கில் நிரப்பப்படும் தொகையின் மதிப்பு 94 மில்லியன் வெள்ளிக்கு மேலாகும்.
சிங்கப்பூரர்களின் அடையாளமாக விளங்கும் ‘சிங்பாஸ்’ செயலியைப் பயன் படுத்தும் மூத்தோருக்கு குறுந்தகவல் வழியாக எவ்வளவு தொகை கிடைக்கும் என்பது தெரிவிக்கப்படும்.
எஞ்சியவர்களுக்கு ஜூன் மாதம் இறுதியில் கடிதம் வழியாக விவரங்கள் தெரிவிக்கப்படும்.