விமான விபத்தில் சிக்கிய நான்கு குழந்தைகள் 40 நாள்களுக்குப் பிறகு கொலம்பியாவின் அமேசான் காட்டுக்குள் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். 13, 9, 4 மற்றும் 1 வயது ஆன அந்த நான்கு பழங்குடியினக் குழந்தைகளும் உயிருடன் திரும்பி வந்ததில் நாடே மகிழ்ச்சி அடைவதாக கொலம்பிய அதிபர் தெரிவித்துள்ளார். இருப்பினும், விபத்தில் இந்தக் குழந்தைகளின் தாயார் இறந்துவிட்டார்.
மே 1ஆம் தேதி அமேசான் காட்டுப் பகுதியின் வான்வெளியில் நிகழ்ந்த விமான விபத்தில் இரு விமானிகளும் மாண்டுவிட்டனர். இந்த விபத்தில் சிக்கிய நான்கு குழந்தைகள் இருக்கும் இடம் தெரிந்ததா மே 17ஆம் தேதி தாம் வெளியிட்ட டுவிட்டர் பதிவை சரியான தகவல் இல்லை என அதிபர் பின்னர் நீக்கிவிட்டார். அதனைத் தொடர்ந்து அவர் களை மீட்க அரசாங்கம் பெருமுயற்சி மேற்கொண்டதாக அதிபர் கஸ்டாவோ பெட்ரோ தெரிவித்தார். உள்ளூர் மக்களின் துணையுடன் ஏராளமான ராணுவ வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்ட நிலையில் ஒருவழியாக காட்டுக்குள் அவர்கள் இருக்கும் இடம் தெரிய வந்தது. உயர்ந்த மரங்களுக்கு நடுவே சிரமப்பட்டு ஹெலிகாப்டர்கள் அந்த நான்கு குழந்தைகளையும் மீட்டு வந்தது.
பின்னர் விமானத்தில் தலைநகர் பொகோட்டாவுக்கு அனுப்பப்பட்ட குழந்தைகள் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன. நால்வரும் உடல் மெலிந்து, சுயநினைவுடன் இருந்ததாக ராணுவத்தினர் கூறினர்.