தமிழகத்தை ஆளும் திமுக அமைச்சரவையில் முக்கிய நபராக இருக்கும் செந்தில் பாலாஜி வீடுகள் உட்பட பல இடங்களில் அமலாக்கத் துறை நேற்று அதிரடி சோதனைகளை நடத்தியது.
இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டதாக செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
மின்சாரம், ஆயத்தீர்வைத் துறை அமைச்சரான செந்தில் பாலாஜி, அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2015 வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கின் தொடர்பில் நேற்று திடீர் சோதனை நடைபெற்றதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டுக்கு ஐந்து கார்களில் வந்த இருபதுக்கும் மேற்பட்ட அதிகாாரிகள் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த வீட்டில்தான் செந்தில் பாலாஜியின் பெற்றோர் வசித்து வருகின்றனர்.
கரூர் ராமகிருஷ்ணபுரம் 2வது குறுக்குத் தெருவில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாரின் வீடு, மண்மங்கலத்தில் உள்ள அவரது மாமனார் வீடு, ராயனூரில் உள்ள கொங்கு மெஸ் மணி வீடு, அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் முன்பு கணினி வேலை பார்த்த சரவணன், அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் முன்பு நேர்முக உதவியாளராகப் பணியாற்றிய வேலாயுதம்பாளையத்தில் உள்ள கார்த்தி ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, அவரது சகோதரர் அசோக்கின் மாமனார் வீடு, அமைச்சரின் முன்னாள் ஊழியர்கள் வீடுகளும் அதிகாரிகளின் சோதனையில் இருந்து தப்பவில்லை.
சென்னையில் அமைச்சரின் அரசு இல்லம், பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அவரது சகோ தரர் தங்கியிருந்த வீடு மற்றும் அலுவலகத்தில் நேற்று காலை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சோதனை நடந்தபோது அமைச்சர் வீட்டில் இல்லை. நடைப் பயிற்சிக்காக வெளியே சென்றிருந்தார்.
சோதனை பற்றி கேள்வியுற்ற அமைச்சர் நடைப் பயணத்தை பாதியில் நிறுத்திக்கொண்டு அவசரமாக வீடு திரும்பினர்.
அப்போது செய்தியாளர்கள் அவரை வழிமறித்து சோதனை குறித்து கேள்விகேட்டனர்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், எதைத் தேடுகிறார்கள், என்ன நோக்கத்திற்காக வந்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்றார்.
ஆனால் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்றார் அவர். இதே விவகாரம் தொடர்பில் மே 26ஆம் தேதி அமைச்சருடன் தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.