தமிழக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராகவும் கரூர் மாவட்ட திமுக செயலாளராகவும் வி. செந்தில் பாலாஜி உள்ளார். இவரது சகோதரர் பெயர் அசோக். சில நாள்களுக்கு முன்பு அசோக், செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள், நெருக்கமான ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
சென்னையிலும் கரூர் அருகேயுள்ள ராமேஸ்வரப்பட்டியிலும் உள்ள அவரது வீடுகள் மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அவரது தம்பி அசோக் வீடு, ராயனூர் பகுதியில் உள்ள கொங்கு மெஸ் மணி வீடு உள்பட 8 இடங்களில் அமலாக்கத் துறையினர் பல மணி நேரம் சோதனை நடத்தினர். இந்த சோதனைகளின் முடிவில் நேற்று அதிகாலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது நெஞ்சுவலி என கூறினார். அத்துடன் வலியால் அவர் துடித்ததாக ஊடகங்கள் குறிப்பிட்டன. இதையடுத்து செந்தில் பாலாஜியை சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அங்கு அவரை கைது செய்தனர். செந்தில் பாலாஜிக்கு ‘ஆஞ்சியோகிராம்’ பரிசோதனை நடத்தப்பட்டதில் அவரது ரத்தக்குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, உடனடியாக ‘பைபாஸ்’ அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். அதனைத் தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய அவரது குடும்பத்தினர் முடிவெடுத்தனர்.
இதற்கிடையே, செந்தில் பாலாஜியை ஜூன் 28 வரை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டார். மருத்துவ சிகிச்சைகளைத் தொடரவும் அவர் அனுமதி அளித்தார்.
முன்னதாக, மருத்துவமனை சென்று செந்தில் பாலாஜியைச் சந்தித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் பின்னர் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
“விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் வழக்கிற்குத் தேவையான சட்ட நடைமுறைகளை மீறி மனிதநேயமற்ற முறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடந்துகொண்டிருப்பது தேவையா?,” என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக தவிர பெரும்பாலான அரசியல் கட்சிகளும் இந்திய அளவில் திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகளும் செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கையைக் கண்டித்துள்ளன.
அதேநேரம், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படியே அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது என்றும் கைது செய்யப்பட்ட நபரை முதல்வர் நேரில் சென்று பார்த்தது கண்டிக்கத்தக்கது என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென முன்னாள் அதிமுக அமைச் சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.