மலேசியர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஆறு மாநில சட்டமன்றத் தேர்தல் ஆகஸ்ட் மாதம் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் இயோவ் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் அல்லது ஜூன் 28ஆம் தேதி பினாங்கு சட்டமன்றம் கலைக்கப்பட்டதில் இருந்து ஐந்து முதல் ஆறு வாரங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்படலாம் என்று அவர் ஊகமாகத் தெரிவித்து உள்ளார்.
‘த ஸ்டார்’ இணையச் செய்தியிடம் பேசிய அவர், சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம்தான் தேர்வு செய்யும். இருப்பினும், ஆகஸ்ட் மாதம் தேர்தல் நடப்பதற்கான சாத்தியம் உள்ளது,” என்றார்.
சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கு முதல் நாளான ஜூன் 27ஆம் தேதி பினாங்கு மாநில ஆளுநர் அகமது ஃபஸி அப்துல் ரசாக்கை முதல்வர் சோவ் சந்திப்பார். சட்டமன்றத்தைக் கலைப்பதற்கான அனுமதியை அப்போது ஆளுநரிடம் அவர் பெறுவார்.
ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறும் வகையில் பினாங்கு உள்ளிட்ட ஆறு மாநிலங்களின் சட்டமன்றத்தை ஒருசேரக் கலைக்க அந்தந்த மாநிலங்களின் முதல்வர்களுக்கு இடையே ஏற்கெனவே புரிந்துணர்வு ஏற்பட்டதாக இதற்கு முன்னர் கூறப்பட்டது.
சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் ஆயுட்காலம் ஜூன் 25ஆம் தேதி கலைக்கப்படாமலேயே நிறைவுபெற்றுவிடும். அதற்கு அடுத்து கிளந்தான் சட்டமன்றம் ஜூன் 27ஆம் தேதியும் திரங்கானு சட்டமன்றம் ஜூன் 30ஆம் தேதியும் நிறைவுக்கு வரும். ஜூலை 1ஆம் தேதி நெகிரி செம்பிலான், ஜூலை 3ஆம் தேதி கெடா சட்டமன்றங்களின் ஆயுட்காலம் முடிவடையும். பினாங்கு மாநிலத்திற்கு ஆகஸ்ட் 2 வரை அவகாசம் இருக்கும் வேளையில் இந்த மாதத்திலேயே அதன் சட்டமன்றம் கலைக்கப்பட உள்ளது.
அதேபோல, ஜூன் 22ஆம் தேதி சட்டமன்றத்தைக் கலைக்க கிளந்தான் முதல்வர் அகமது யாக்கோப்பும் ஜூன் 30ஆம் தேதி சட்டமன்றத்தைக் கலைக்க நெகிரி செம்பிலான் முதல்வரும் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில், ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் ஆறு சட்டமன்றத் தேர்தல்களும் நடத்தப்படலாம் என்று எதிர்த்தரப்பு பெர்சத்து கட்சியும் தெரிவித்து உள்ளது. குறிப்பாக, ஹஜ் பெருநாள் முடிவடைந்த பின்னர் அதற்கான சாத்தியம் இருப்பதாகவும் அது கூறியுள்ளது.