தஞ்சோங் பகாரில் உள்ள ஃபூஜி ஸெராக்ஸ் டவர்ஸ் கட்டடத்தின் ஒரு பகுதி வியாழக்கிழமையன்று இடிந்து விழுந்ததில் காணாமற்போன இந்திய ஊழியரின் உடல் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
ஊழியருக்கான தேடல் பணிகள் ஆறு மணிநேரத்துக்கும் மேல் நீடித்தன.
அவரின் உடல் இடிபாடுகளுக்குக்கீழ் சுமார் இரண்டு மீட்டர் ஆழத்தில் சிக்கியிருந்தது.
வியாழக்கிழமை இரவு 9.45 மணியளவில் அவரின் உடல் மீட்கப்பட்டது.
மாலை சுமார் ஆறு மணிக்கு ஊழியரின் உடல் தென்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அவருக்கு நாடித் துடிப்பு இல்லை என்றும் அவர் மூச்சு விடவில்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
ஃபூஜி ஸெராக்ஸ் டவர்ஸ் கட்டடத்தின் ஒரு பகுதியை இடிப்பதற்காகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தபோது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.
இடிப்பதற்கான பணிகள் நடந்தபோது இரண்டாம் தளத்தில் இருந்த வலுப்படுத்தப்பட்ட கான்கிரீட் சுவர் பெர்னாம் ஸ்திரீட்டில் இடிந்து விழுந்ததென மனிதவள அமைச்சும் கட்டட, கட்டுமான ஆணையமும் கூட்டு அறிக்கை ஒன்றில் முன்னதாகத் தெரிவித்தன.
அந்தச் சுவரின் நீளம் 10 மீட்டர், உயரம் 3.8 மீட்டர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து கட்டுமானம் தொடர்பான அனைத்துப் பணிகளையும் நிறுத்துமாறு கட்டட, கட்டுமான ஆணையம், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிட்டதாகவும் விசாரணை நடைபெறும்போது அவை மேற்கொள்ளும் பணிகளுக்கான உரிமம் மீட்டுக்கொள்ளப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் அனைத்துப் பணிகளையும் நிறுத்துமாறு மாண்ட ஊழியரின் நிறுவனத்துக்கு மனிதவள அமைச்சு உத்தரவிட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
இடிப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வந்த நிறுவனம் வோ ஹப் என்றும் மாண்ட ஊழியர் அய்க் சன் டிமாலிஷன் அண்ட் இன்ஜினியரிங் நிறவனத்துக்கு வேலை செய்தவர் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்துவிழுந்தபோது பெரிய சத்தம் எழுந்தது.
ஆனால் அது வழக்கமான சத்தம் என்று எண்ணி அருகில் இருப்பவர்கள் அக்கறை காட்டவில்லை.
“முதலில் சத்தம் கேட்டபோது எனக்கு ஒன்றும் புரியவில்லை. அதற்குப்பின் என் வேலையிடத்தில் உள்ளவர்கள் கட்டடம் இடிந்து விழுந்ததைப் பற்றிப் பேச ஆரம்பித்தனர். அதில் ஒருவர் சிக்கியுள்ளார் என்றும் கூறினர்,” என்று அருகில் உள்ள கட்டடத்தில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் கூறினார்.
தீயணைப்பாளர்கள், மீட்புப் பணியாளர்கள், அவசரகால மருத்துவ சேவை ஊழியர்கள் உட்பட எழுபதுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
ஏறக்குறைய 11 அவசரகால வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன.
பிற்பகல் இரண்டு மணியளவில் சம்பவம் குறித்துத் தங்களுக்குத் தகவல் வந்ததென சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
இடிபாடுகளில் வேறு யாரும் சிக்கிக்கொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்த மீட்புப் பணிகள் தொடரும் என்று குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
கூடுதல் செய்தி: ரச்சனா வேலாயுதம்