கொவிட்-19 தடுப்பூசிகளின் செயல்திறன் முதியவர்களிடையே குறைவாகவுள்ளபோதும், இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது அவர்களுக்கு கணிசமான அளவு கூடுதல் பாதுகாப்பு அளிக்கிறது.
சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வுகள் அதைத் தெரிவிக்கின்றன.
சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வை சுகாதார அமைச்சு வழிநடத்தியது. 80 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுள்ள 80,000 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
நான்கு எம்ஆர்என்ஏ வகை கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுள்ளவர்களுக்கு, அத்தகைய மூன்று தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்ட அதே வயதுப் பிரிவினரைவிட கூடுதல் நோய் தடுப்பாற்றல் இருந்தது.
மேலும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயம் பாதியாக இருந்தது.
மூன்றாவது தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்களைவிட நான்காவது தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்பு கடும் நோய் அல்லது மரணம் ஏற்படும் அபாயம் மூன்றில் ஒரு பங்கு குறைகிறது.
தற்போதுது 80 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுள்ள முதியவர்களில் 61 விழுக்காட்டினர் மட்டுமே கடந்த ஓராண்டுக்குள் ஆகக் கடைசி தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்.
தேசிய பல்கலைக்கழகத்தின் சோ சுவீ ஹோக் பொதுச் சுகாதாரப் பள்ளியில் தொற்றுநோய் சிகிச்சை நிபுணராகப் பணியாற்றும் இணைப் பேராசிரியர் சூ லியாங், கொவிட்-19 தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு காலப்போக்கில் குறையும் என்றார்.
ஒவ்வொரு தடுப்பூசியும் தடுப்பாற்றல் குறைவதைத் தடுத்து அதை தற்காலிகமாக அதிகரிக்கும். குறுகிய காலநோக்கில் தொற்று ஏற்படுவதையும் தடுக்கும் என்று அவர் கூறினார்.
“அதனால் முதியவர்கள் கட்டாயம் இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். மேலும் நிபுணர் குழு பரிந்துரைக்கும் பட்சத்தில் மூன்றாவது பூஸ்டரையும் அவர்கள் போட்டுக்கொள்ள வேண்டும்,” என்று டாக்டர் சூ தெரிவித்தார்.
முன்கூட்டியே தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது/