சிட்னி: கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றும் விவகாரத்தில் ஈடுபட்டதாக சீனக் கும்பலைச் சேர்ந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் எழுவரை ஆஸ்திரேலியக் காவல்துறை புதன்கிழமை கைது செய்தது.
சீனாவைச் சேர்ந்த ‘லாங் ரிவர்’ எனும் கும்பலைச் சேர்ந்த எழுவர் ‘சாங்ஜியாங்’ எனும் பணப் பரிவர்த்தனை செய்யும் நிறுவனம் மூலம் கள்ளப் பணமான 229 மில்லியன் ஆஸ்திரேலிய டாலரை (S$314 மி.) நல்ல பணமாக மாற்றும் குற்றம் புரிந்ததாக ஆஸ்திரேலியக் காவல்துறை வியாழக்கிழமை கூறியது.
அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்புடன் ஆஸ்திரேலியக் காவல்துறையைச் சேர்ந்த 330க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இணைந்து ஐந்து மாநிலங்களில் உள்ள 20 இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் எழுவரில் நால்வர் சீனாவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்பட்டது.
2020ஆம் ஆண்டுக்கும் இவ்வாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அவர்கள் குற்றம் புரிந்ததாக ஆஸ்திரேலியக் காவல்துறை குறிப்பிட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் 35 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள். மெல்பர்ன் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட இருந்தனர்.