பெய்ஜிங்: சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் விவகாரம் குறித்து வார இறுதியில் சீனாவும் அமெரிக்காவும் ஒன்றையொன்று சாடிக்கொண்டன.
தென்சீனக் கடல்பகுதியில் அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று வழக்கமான கடல்சார்ந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்ததாக அந்நாட்டுக் கடற்படை கூறியது. இருப்பினும், அந்தப் போர்க்கப்பலை அங்கிருந்து வெளியேறச் சொன்னதாக சீன ராணுவம் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து, இருதரப்புக்கும் இடையே குறைகூறல்கள் எழுந்தன.
அந்த அமெரிக்கக் கப்பலைப் பின்தொடர்ந்து, கண்காணித்து, அதற்கு எச்சரிக்கை விடுக்க சீன ராணுவம் அதன் கடல், ஆகாயப் படைகளைப் பணியில் அமர்த்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
அனைத்துலகச் சட்டத்தின்படி, ‘பேரசேல் தீவுகளுக்கு’ அருகில் தென்சீனக் கடலில் ‘ஹாப்பர்’ எனும் அந்தப் போர்க்கப்பல் கடற்பயண உரிமைகளைக் கொண்டுள்ளதாக அமெரிக்கக் கடற்படை கூறியது.
கிட்டத்தட்ட தென்சீனக் கடல் முழுவதுக்கும் சீனா உரிமை கோரிவருகிறது. ஆண்டுதோறும் மூன்று டிரில்லியன் டாலர் வணிகம் அக்கடல் பகுதி வழியாக இடம்பெறுகிறது. பிலிப்பீன்ஸ், வியட்னாம், இந்தோனீசியா, மலேசியா, புருணை ஆகியவையும் தென்சீனக் கடலின் சில பகுதிகளுக்கு உரிமை கோருகின்றன.
இதற்கிடையே, பிலிப்பீன்ஸ், அமெரிக்க ராணுவங்கள் நடத்திய கூட்டு நடவடிக்கைகளைக் கோடிகாட்டி தென்சீனக் கடலில் பிலிப்பீன்ஸ் வெளிநாட்டுப் படைகளைப் பணியில் அமர்த்துவதாக பெய்ஜிங் குற்றஞ்சாட்டியது. அதனைத் தொடர்ந்து, பிலிப்பீன்சும் ஆஸ்திரேலியாவும் தென்சீனக் கடலில் அவற்றின் முதல் கூட்டுக் கடல், ஆகாயச் சுற்றுக்காவல் நடவடிக்கைகளை சனிக்கிழமை மேற்கொண்டன.
இந்நிலையில், தென்சீனக் கடலில் அமெரிக்கா பாதுகாப்பு இடையூறுகளை ஏற்படுத்துவதை அண்மையச் சம்பவம் காட்டுவதாக சீனா குறிப்பிட்டுள்ளது.