உலகின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் இவ்வாண்டில் 5,000 விமானச் சிப்பந்திகளை வேலைக்கு எடுக்க இருக்கிறது.
குறிப்பாக, துபாயை மையமாகக் கொண்ட எமிரேட்ஸ் நிறுவனம், வேலைச் சந்தையில் புதிதாக அடியெடுத்து வைப்பவர்களைக் குறிவைத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உள்ளகப் பயிற்சியுடன் (internship) அண்மையில் பட்டம் பெற்றவர்கள் அல்லது பகுதிநேர வேலை அனுபவம் உள்ளவர்கள் அல்லது விருந்தோம்பல் அல்லது வாடிக்கையாளர் சேவைத் துறையில் ஓராண்டிற்கும் குறைவாக அனுபவம் உள்ளவர்களை அந்நிறுவனம் தேடுகிறது.
ஆறு கண்டங்களில் 460க்கும் மேற்பட்ட நகரங்களில் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை எமிரேட்ஸ் குழுவினர் நடத்தவுள்ளனர்.
கடந்த 2023ஆம் ஆண்டில் 353 நகரங்களில் இடம்பெற்ற ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மூலம் அந்நிறுவனம் கிட்டத்தட்ட 8,000 பேரை விமானச் சிப்பந்தி வேலைக்கு எடுத்தது.
இப்போது, எமிரேட்ஸ் நிறுவனத்தில் ஏறத்தாழ 21,500 பேர் விமானச் சிப்பந்திகளாகப் பணியாற்றுகின்றனர்.
இவ்வாண்டில் ஏ350 விமானங்களையும் அடுத்த ஆண்டில் போயிங் 777-எக்ஸ்எஸ் விமானங்களையும் அந்நிறுவனம் சேவையில் களமிறக்கவுள்ள நிலையில், விமானச் சிப்பந்திகள் ஆளெடுப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.