பாரிஸ்: ஐரோப்பா சென்ற ஆண்டு முன்னெப்போதும் இல்லாத அளவில் ‘கடும் வெப்ப அயர்ச்சி’ நாள்களை எதிர்கொண்டதாக இரண்டு முன்னணிப் பருவநிலைக் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
அந்த ஓராண்டில் ஐரோப்பாவில் வெப்ப அலைகள் மட்டுமின்றி கடும் வெள்ளம், வறட்சி, மோசமான புயல், ஆகப் பெரிய காட்டுத் தீச்சம்பவம் ஆகியவையும் நிகழ்ந்தன.
இந்தப் பேரிடர்களால் பல பில்லியன் டாலர் அளவில் சேதம் ஏற்பட்டது; இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘கோப்பர்நிக்கஸ்’ பருவநிலை மாற்றச் சேவையும், ஐக்கிய நாட்டு நிறுவன உலக வானிலை அமைப்பும் கூட்டு அறிக்கை ஒன்றில் தெரிவித்தன.
சுகாதார விளைவுகள் குறிப்பாகக் கடுமையாக இருந்தன. வெப்பம் ஆகப் பெரிய பருவநிலை தொடர்பான மிரட்டலாக விளங்கியது.
“ஐரோப்பா முழுதும் வெப்ப அயர்ச்சி நிறைந்த நாள்களை நாம் காண்கிறோம். 2023ஆம் ஆண்டு அதற்கு விதிவிலக்கல்ல. ஐரோப்பாவில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில், ‘கடும் வெப்ப அயர்ச்சி’ நாள்கள் பதிவாயின,” என்று ‘கோப்பர்நிக்கஸ்’ன் பருவநிலை அறிவியலாளர் டாக்டர் ரெபெக்கா இமர்ட்டன் கூறினார்.
கடும் வெப்பத்திற்கு நீண்டநேரம் வெளியில் திரிவது, குறிப்பாக முதியோர், ஏற்கெனவே சுகாதாரப் பிரச்சினைகளைக் கொண்டவர்கள் போன்ற எளிதில் பாதிக்கப்படுவோருக்கு ஆபத்து என்று தெரிவிக்கப்பட்டது.
வெப்பத்தின் தாக்கம் நகரங்களில் மேலும் வலுவாக உள்ளது என அறிக்கை கூறியது.
ஐரோப்பாவின் ஆக மோசமான 30 வெப்ப அலைகளில் 23, இந்த நூற்றாண்டில் நிகழ்ந்துள்ளன. வெப்பம் தொடர்பான மரணங்கள் கடந்த இருபது ஆண்டுகளில் கிட்டத்தட்ட 30 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அறிக்கை குறிப்பிட்டது.