காஸா: பாலஸ்தீனப் போராளிக் குழுவான ஹமாஸ், காஸாவில் முழுமையான, விரிவான சண்டைநிறுத்தம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளதாக ஹமாஸ் மூத்த அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.
தற்காலிகச் சண்டைநிறுத்தத்திற்கான கட்டமைப்பு முன்மொழியப்படுவதாக கத்தார் கூறியதை அடுத்து ஹமாசின் கருத்து வந்துள்ளது.
“நாங்கள் முழுமையான, விரிவான சண்டைநிறுத்தத்தைப் பற்றிப் பேசுகிறோம். தற்காலிகச் சண்டைநிறுத்தத்தைப் பற்றி அல்ல,” என்று தாஹிர் அல்-நுனு, ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
சண்டை நிறுத்தப்பட்டதும் பிணைக்கைதி விடுவிப்பு உள்ளிட்ட மற்ற விவரங்கள் பற்றி கலந்துபேசப்படலாம் என்றும் அவர் சொன்னார்.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி போர் தொடங்கியதிலிருந்து எகிப்துடனும் அமெரிக்காவுடனும் கத்தார் சமரச முயற்சிகளை வழிநடத்தி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க மத்தியப் புலனாய்வு அமைப்பின் தலைவர் பில் பர்ன்சுடனும், முன்னணி இஸ்ரேலிய, எகிப்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடனும் பாரிசில் நடந்த கூட்டங்களில், கட்டங்கட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் சண்டைநிறுத்தத்திற்கான கட்டமைப்பு பரிந்துரைக்கப்பட்டதாக கத்தார் பிரதமர் ஷேக் முகம்மது அப்துல்ரஹ்மான் அல் தானி கூறினார்.
இந்தப் பரிந்துரை குறித்து ஹமாசிடம் தெரிவித்து, அவர்களை ஆக்ககரமான முறையில் ஈடுபடுத்த எதிர்பார்த்ததாகவும் அவர் சொன்னார்.
இருப்பினும் ஹமாஸ், கத்தாரிடமிருந்து அந்தப் பரிந்துரை குறித்து தகவல் பெற்றதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.