பேங்காக்: தாய்லாந்தின் தென்பகுதியில் வெள்ளிக்கிழமை (மார்ச் 22) கடைகள், கார்கள், மின்கம்பங்கள் எனக் குறைந்தது 40 இடங்களுக்குத் தாக்குதல்காரர்கள் தீ வைத்ததில் குறைந்தது ஒருவர் மாண்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பட்டானி, யாலா, நராத்திவாட், சொங்க்லா ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ளூர் நேரப்படி பின்னிரவு 1 மணியளவில் (சிங்கப்பூர் நேரப்படி 2 மணி) அத்தாக்குதல்கள் இடம்பெற்றதாகக் கூறப்பட்டது.
மலேசிய எல்லையை ஒட்டிய அப்பகுதிகளில் கடந்த பல பத்தாண்டுகளாகவே கிளர்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை நிகழ்ந்த வெடிப்பு ஒன்றில் மாண்டவர் மியன்மாரைச் சேர்ந்த பெண் தொழிலாளி என்று அதிகாரிகள் கூறினர்.
“ரமலான் நோன்புக் காலத்தில் அமைதியைக் குலைப்பதே குற்றவாளிகளின் விருப்பம்,” என்றார் தாய்லாந்து ராணுவப் பேச்சாளர் கர்னல் ஏக்வரித்.
உள்ளூர்ப் பொருளியலையும் பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கர்னல் ஏக்வரித் கூறினார்.
தாக்குதல்காரர்கள் முதலில் துப்பாக்கியால் வானை நோக்கிச் சுட்டு, கடைகளிலிருந்து ஊழியர்களை வெளியேற்றியதாகவும் பின்னர் கட்டடங்களுக்குத் தீ வைத்ததாகவும் அவர் சொன்னார்.
வழக்கம்போல் இத்தாக்குதல்களுக்கும் எவரும் பொறுப்பேற்கவில்லை.
கடந்த பிப்ரவரி மாதம் ஒரு கிளர்ச்சிக் குழுவுடன் தாய்லாந்து அரசாங்கம் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கியது.
தாய்லாந்தின் தென்கோடியில் உள்ள பட்டானி மாநிலம், சுதந்திரமான இஸ்லாமிய அரசரின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. பின்னர் 1909ஆம் ஆண்டு, பிரிட்டனுடனான ஓர் உடன்படிக்கையை அடுத்து, அப்பகுதி தாய்லாந்துடன் இணைக்கப்பட்டது.
கடந்த 2004ஆம் ஆண்டிலிருந்து அங்கு நிகழ்ந்துவரும் மோதல்களில் 7,300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுவிட்டதாக ‘டீப் சௌத் வாட்ச்’ எனும் கண்காணிப்புக் குழுவின் தகவல் தெரிவிக்கிறது.