பெட்டாலிங் ஜெயா: சாலையில் சென்றுகொண்டிருந்த விரைவுப் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அதன் ஓட்டுநரும் அதிலிருந்த 16 பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து, உடனே பேருந்திலிருந்து அவர்கள் இறங்கியதால் அனைவரும் காயமின்றித் தப்பினர்.
இச்சம்பவம் சனிக்கிழமை (ஏப்ரல் 20) நள்ளிரவு மலேசியாவின் ஈப்போ அருகே, வடக்கு - தெற்கு விரைவுச்சாலையில் நிகழ்ந்தது.
உதவி கோரி நள்ளிரவில் தங்களுக்கு அழைப்பு வந்தது என்று ஈப்போ தீயணைப்பு, மீட்புத் துறையின் செயல்பாட்டுத் தளபதி ஃபவாஸ் அப்துல் கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
விரைந்து சென்ற தீயணைப்பாளர்கள், இரவு 12.50 மணியளவில் தீயை முற்றிலும் அணைத்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
ஆயினும், பேருந்தின் கிட்டத்தட்ட 80 விழுக்காட்டுப் பகுதி தீக்கிரையாகிவிட்டது.
பின்னர் பயணிகள் அனைவரும் வேறு பேருந்து மூலம் பயணத்தைத் தொடர்ந்தனர்.
பேருந்தில் தீப்பற்றியதற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.