கூட்டத்தைத் தவிர்க்க திரையரங்கில் அனைத்து நுழைவுச்சீட்டுகளையும் மலேசியப் பெண் ஒருவர் வாங்கினார்.
சமூக ஊடகப் பிரபலமான எரிய்கா பய்தூரி, வெறிச்சோடி காணப்படும் திரையரங்கு ஒன்றில் தாம் மட்டும் அமர்ந்து படம் பார்ப்பதைக் காட்டும் காணொளியை டிக்டாக் தளத்தில் ஜனவரி 3ஆம் தேதி பதிவேற்றம் செய்தார்.
அழகு சாதன நிறுவனம் ஒன்றை நடத்தும் அவர், அந்தக் காணொளியில் பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்.
“நாங்கள் கூச்ச சுபாவம் உடையவர்கள்! எனவேதான் அனைத்து நுழைவுச்சீட்டுகளையும் வாங்கிவிட்டோம்,” என்று காணொளியின் தலைப்பில் அவர் குறிப்பிட்டார்.
இந்த டிக்டாக் காணொளி சுமார் 60,000 பார்வைகளையும் 280 கருத்துகளையும் பெற்றுள்ளது. அக்காணொளியைப் பார்த்து கருத்து பதிவிட்ட டிக்டாக் பயனாளர்கள் பலர், தாங்களும் தனியாக திரைப்படம் பார்க்க விருப்பம் தெரிவித்தனர்.
தாம் பார்த்த திரைப்படத்தின் பெயரை எரிய்கா குறிப்பிடவில்லை.
அந்தத் திரையரங்கில் சுமார் 10 வரிசை இருக்கைகள் இருப்பது காணொளியில் தெரிந்தது. ஒவ்வொரு வரிசையிலும் 16 இருக்கைகள் உள்ளன.
திரையரங்கு நுழைவுச்சீட்டு விலை சராசரியாக 11 ரிங்கிட்டிற்கும் (S$3.15) 35 ரிங்கிட்டிற்கும் இடைப்பட்டு இருக்கும். அப்படிப் பார்த்தால், அனைத்து நுழைவுச்சீட்டுகளை வாங்க எரிய்கா 1,760 ரிங்கிட் முதல் 5,600 ரிங்கிட் வரை செலவிட்டிருக்கலாம்.