ஜகார்த்தா: இந்தோனீசிய மக்களுக்கு சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தியா, இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் ஐந்து நாள் சிறுதானிய உணவுத் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
நவம்பர் 22ஆம் தேதி தொடங்கிய இந்தத் திருவிழா நவம்பர் 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும்.
இதுகுறித்து ஆசியானுக்கான இந்திய தூதர் ஜெயந்த் கோப்ரகடே செய்தியாளர்களிடம் பேசும்போது, ஆசியானுக்கான கூட்டமைப்பில் இந்தோனீசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருணை, வியட்னாம், லாவோஸ், மியன்மார், கம்போடியா ஆகிய 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இந்த நாடுகளில் சிறுதானியச் சந்தைகளை உருவாக்கவும், அந்நாட்டு மக்களின் சிறந்த உணவுக்கான தேர்வாக சிறுதானியத்தை மாற்றி அமைக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்தியா இந்த உணவுத் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
ஆசியானுக்கான இந்திய தூதரகம், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் இணைந்து இந்த உணவுத் திருவிழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.
கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி ஆசியான்-இந்தியா மாநாடு நடந்தது. அப்போது, உணவுப் பாதுகாப்பு பற்றிய கூட்டறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில், “மாநாடு நடந்து இரண்டு மாதங்களிலேயே சிறுதானிய திருவிழா நடத்தப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்வதில் சிறுதானியங்களின் பங்கு மிக முக்கியமானதாக விளங்குகிறது,” என்று இந்தியத் தூதர் கோப்ரகடே தெரிவித்தார்.
“ஆசியான் இந்தியா சிறுதானிய விழா, சிறுதானியத்தின் பயன்கள், சத்துணவு நிலை, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை முதல் பொருளியல் வளர்ச்சி வரை விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
“இப்போது அதிகமானோருக்கு சிறுதானிய உணவில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. எனவே, சிறுதானிய வேளாண்மை பெருகி வர்த்தகம் சீரான வளர்ச்சியைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்றார் திரு கோப்ரகடே.
இந்த சிறுதானிய உணவுத் திருவிழாவின் முக்கிய சிறப்பம்சமாக நேரடிச் சமையல் பயிலரங்குகள் இடம்பெற்றன. இதில் இந்தியா மற்றும் இந்தோனீசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற சமையல்காரர்கள் சிறுதானியங்களில் சமைப்பது குறித்த தங்களது திறன்களை வெளிப்படுத்தினர்.