கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரின் ரஷித் மின்ஹாஸ் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் சனிக்கிழமை நிகழ்ந்த தீ விபத்தில் கிட்டத்தட்ட 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் தீப்பிடித்த கட்டடத்திற்குள் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
40 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 55 பேர் தீக்காயங்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஏழு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கட்டடத்தில் தீப்பிடிக்கும்போது 60க்கு மேற்பட்டோர் அந்த வளாகத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
கராச்சியில் ரஷித் மின்ஹஸ் சாலையில் ஆர்.ஜே வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்புப் படையினர், மீட்புக்குழுவினர் போராடி வருகின்றனர்.
அந்தக் கட்டடத்திற்கான ஜெனரேட்டரில் ஏற்பட்ட மின்கோளாறே இந்த தீவிபத்துக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
2012ஆம் ஆண்டில் கராச்சியின் மேற்குப் பகுதியில் உள்ள பால்டியா நகரில் உள்ள ஆடைத் தொழிற்கூடத்தில் நிகழ்ந்த தீ விபத்தில், அங்கு பணிபுரிந்த 250 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
அதே பால்டியா நகரில், 2021ஆம் ஆண்டில், ஒரு ரசாயனத் தொழிற்சாலையில் மூண்ட தீயில் 10 பேர் உயிரிழந்தனர்.
கராச்சி நகரில் வணிக வளாகங்களும், தொழிற்கூடங்களும் பாதுகாப்பு விதிமுறைகளை சரிவரக் கடைப்பிடிக்காததே இதுபோன்று அடிக்கடி தீ விபத்துக்கு வழிவகுப்பதாகக் கூறப்படுகிறது.