சோல்: இணையவெளியில் வடகொரியாவின் மிரட்டல்களை எதிர்கொள்ள அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நட்பு நாடுகள் சனிக்கிழமை (டிசம்பர் 9) புதிய திட்டங்களில் இணக்கம் கண்டன.
கூடுதலான வேவு செயற்கைக்கோள்களை ஏவப்போவதாக வடகொரியா எச்சரித்துள்ள வேளையில், அந்த மூன்று நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களும் தென்கொரியத் தலைநகர் சோலில் சந்தித்தனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்று நடத்திய ‘கேம்ப் டேவிட்’ எனும் முத்தரப்புக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கடப்பாடுகளைத் தொடர்ந்து இச்சந்திப்பு நடந்ததாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறினார்.
“இணையக் குற்றம், மெய்நிகர் நாணய மோசடி, பொறுப்பற்ற ஏவுகணைச் சோதனைகள் என வடகொரியா விடுக்கும் மிரட்டல்களை எதிர்கொள்ள புதிய முத்தரப்புத் திட்டங்களை நாங்கள் தொடங்கியுள்ளோம்.
சீனாவின் அதிகரித்துவரும் செல்வாக்கு, வடகொரிய அணுவாயுத மிரட்டல்கள் இடம்பெறும் சூழலில், ‘கேம்ப் டேவிட்’ கூட்டத்தில் தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் மற்றும் ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் திரு பைடன் சந்திப்பு நடத்தினார்.
பாதுகாப்பு, பொருளியல் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் அந்த மூன்று நாட்டுத் தலைவர்கள் அப்போது உறுதியளித்தனர்.
தைவான் நீரிணைப் பகுதி முழுவதும் அமைதிக்காகவும் நிலைத்தன்மைக்காகவும் கிழக்கு, தென்சீனக் கடற்பகுதியில் கடற்பயணச் சுதந்திரத்திற்காகவும் மூன்று நட்பு நாடுகள் தொடர்ந்து குரல்கொடுப்பதாக திரு சல்லிவன் சொன்னார்.