வாஷிங்டன்: காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தீவிர தாக்குதலைக் குறைத்துக்கொள்ளுமாறு அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவை அமெரிக்கா கேட்டுக்கொண்டு உள்ளது.
தாக்குதலின் தீவிரத்தைத் தணிப்பது தொடர்பாக அதிபர் ஜோ பைடனும் உயர்மட்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனும் ஆலோசனை நடத்தியதாக மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை கூறினார்.
காஸாவின் 2.3 மில்லியன் மக்கள்தொகையைப் பாதுகாக்க வாஷிங்டன் ஒரு வாரத்திற்குமேல் அழுத்தம் கொடுத்ததற்குப் பின்னால் தாக்குதல் உத்தி மீது கவனம் திரும்பி உள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேலின் சேனல் 12 தொலைக்காட்சியிடம் சல்லிவன் பேசினார்.
இப்போது கடைப்பிடிப்பதைவிட மேலும் துல்லியமான, இலக்கை நோக்கிய உத்திக்கு மாறுவது பற்றி நெட்டன்யாகுவிடம் பேசியதாக அவர் கூறினார். இருப்பினும், இந்த உத்தி மாற்றம் எப்போதிருந்து நடப்புக்கு வரும் என்பது குறித்து அவர் விவரம் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
இதற்கிடையே, அந்த மாற்றத்தை ஆண்டிறுதிக்குள் கொண்டுவர அமெரிக்கா வலியுறுத்தி இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் வியாழக்கிழமை தெரிவித்தது.
அந்தக் காலக்கெடு பற்றி அதிபர் பைடன் கூறுகையில், “பொதுமக்களின் உயிரை எப்படிப் பாதுகாப்பது என்பதன் மீது இஸ்ரேல் கவனம் செலுத்த வேண்டும். அதே நேரம், ஹமாஸை விட்டுவிடாமல் மேலும் கவனத்துடன் செயல்பட வேண்டும்,” என்றார்.
காஸாவில் இரு மாதங்களுக்கு மேலாக போர் நீடிக்கிறது. வியாழக்கிழமை 40 கிலோமீட்டர் தூரத்திற்கு இஸ்ரேலின் தாக்குதல் பிடி காணப்பட்டது. மனிதாபிமானப் பேரழிவு முற்றுப்பெறுவதற்கான சாத்தியம் அங்கு குறைவாக உள்ளதாகவே தெரிகிறது.
அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய ஹமாஸ் போராளிகளின் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தது. அதனைத் தொடர்ந்து காஸாவில் நடைபெற்ற சண்டையில் கிட்டத்தட்ட 19,000 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.