பெய்ஜிங்: சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் வியாழக்கிழமை மாலை உச்சநேரத்தில் நடந்த பெருவிரைவு ரயில் விபத்தில் அதில் பயணம் செய்த 102 பயணிகளுக்கு எலும்பு முறிவுக் காயங்கள் ஏற்பட்டதாக அரசு ஊடகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
சுரங்கத்திலிருந்து ரயில் வெளியான சிறிது நேரத்தில் அவ்விபத்து நிகழ்ந்தது. சீனத் தலைநகரில் இதுபோன்ற விபத்துகள் மிக அரிது.
அவ்வாறு இருக்கையில், கடந்த சில நாள்களாக அங்கு பனிப்புயல் வீசிக்கொண்டிருப்பதால், சாலைகளில் பனி கொட்டிக் கிடக்கிறது. போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு, சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
வியாழக்கிழமை (டிசம்பர் 14) மாலை 6.57 மணிக்கு, பெருவிரைவு ரயிலின் கடைசி இரண்டு பெட்டிகள் முன்னால் உள்ள பெட்டிகளின் இணைப்பிலிருந்து பிரிந்தன என்று அதிகாரிகள் முன்னதாகக் குறிப்பிட்டிருந்தனர்.
வியாழக்கிழமை இரவு 11 மணி நிலவரப்படி, மொத்தம் 515 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்றும் அதில் 102 பேருக்கு எலும்பு முறிவுக் காயங்கள் ஏற்பட்டதாகவும் அரசுத் தொலைக்காட்சியான சிசிடிவி டிசம்பர் 15ஆம் தேதி கூறியது.
வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்குள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் 423 பேர் வீடு திரும்பி விட்டனர் என்றும் 67 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் உயிரிழப்புகள் இ்லலை.
பனிப்பொழிவு காரணமாக ரயில் தண்டவாளம் வழுக்கியது, சமிக்ஞைக் கோளாறு ஆகியவற்றால்தான் ரயில் விபத்து நிகழ்ந்தது என்று ஆரம்பக்கட்ட புலனாய்வில் தெரிய வந்தது.
“விபத்து குறித்து நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்,” என்று ரயில் நடத்துநரான ‘பெய்ஜிங் சப்வே’ வெய்வோ செய்தித் தளத்திடம் தெரிவித்தது.
“மீட்பு நடவடிக்கையின்போது, தாங்களாகவே அவ்விடத்தை விட்டுச் சென்ற பயணிகளுக்கு உடல்நலமில்லை என்றால் எங்களுடன் உடனடியாகத் தொடர்புகொள்ளவும். உங்கள் மருத்துவச் செலவுகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்,” என்றும் அந்த ரயில் நிறுவனம் கூறியதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் விவரித்தது.