பெய்ஜிங்: தென்சீனக் கடல் விவகாரத்தின் தொடர்பில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணுமாறு சீனா, பிலிப்பீன்சுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்சீனக் கடல் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பெரிய அளவில் சிக்கல்கள் எழுந்திருப்பதாக சீனா கருதுகிறது. இரு தரப்பு கப்பல்களும் ஈடுபட்ட சம்பவங்கள் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து இந்நிலை ஏற்பட்டுள்ளது.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, பிலிப்பீன்ஸ் வெளியுறவு அமைச்சர் என்ரிக்கே மனாலோவுடன் தொலைபேசியில் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டது.
“சீன-பிலிப்பீன்ஸ் உறவு இக்கட்டான கட்டத்தில் உள்ளது,” என்று திரு வாங், திரு மனாலோவிடம் கூறியதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டது. “கடற்பகுதியின் தற்போதைய நிலையைக் கையாண்டு கட்டுக்குள் கொண்டுவருவதற்கே முன்னுரிமை வழங்கப்படும்,” என்றும் திரு வாங் கூறியிருக்கிறார்.
இருவரும் வெளிப்படையான முறையில் பேசியதாக திரு மனாலோ வியாழக்கிழமையன்று தெரிவித்தார்.
“இந்த விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதன் முக்கியத்துவத்தை நாங்கள் இருவரும் முன்வைத்தோம்,” என்று திரு மனாலோ சொன்னதாக வெளியுறவு அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
இரு தலைவர்களில் யார் தொலைபேசி உரையாடலைத் தொடங்கினார் என்பது குறித்த தகவல் தெரிவிக்கப்படவில்லை.