சிட்னி : கிறிஸ்துமஸ் காலகட்டத்தில் பொட்டலங்களில் 120 கிலோவுக்கும் அதிகமான கொக்கெய்ன் போதைப்பொருள் கடற்கரைகளில் காணப்பட்டதாக ஆஸ்திரேலிய காவல்துறை புதன்கிழமை (டிசம்பர் 27) தெரிவித்தது.
சிட்னியின் வடக்குப் பகுதியில் உள்ள மெஜந்தா கடற்கரைக்கு அருகே , “பானக்கிள்” எனப்படும் கடல்வாழ் ஒட்டுண்ணிகள் படிந்த கற்களால் மறைக்கப்பட்ட ஒரு கிலோ எடையுள்ள 39 கொக்கெய்ன் கட்டிகள் டிசம்பர் 22 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது என்று மாநில காவல்துறை தெரிவித்தது.
அதனைத் தொடர்ந்து, குறிப்பிட்ட அதே அளவில் 85 பொட்டலங்கள் நியூ சவுத் வேல்ஸ் கடற்கரையில் சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் காணப்பட்டன என்றும் காவல்துறை கூறியது.
இவை போன்ற போதைப்பொருள் கொண்ட பொட்டலங்களைக் கைப்பற்ற, நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை தங்களுடைய போல்ஏர் எனப்படும் புலனாய்வாளர்களுடன், ஆஸ்திரேலிய எல்லைப் படை, சர்ஃப் லைஃப் சேவிங் (நியூ சவுத் வேல்ஸ்) என்ற சிறப்புப் பிரிவுகளுடனும் இணைந்து பணியாற்றி வருகிறது.
தற்போது, காவல்துறை அதிகாரிகள் கடற்கரைகளைச் சுற்றி புலனாய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.