செக் குடியரசின் தலைநகர் பிராக்கில் நகரின் அழகைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது கடைசியாக திருவாட்டி சோஃபியா காதுக்கு கேட்டது பலத்த காற்றின் ஓசை.
அதைத் தொடர்ந்து அவரது கணவர் திடீரென கீழே சரிந்து விழுந்தார்.
டிசம்பர் 21ஆம் தேதியன்று வந்தது காற்றின் ஓசை அல்ல. மாறாக, அது துப்பாக்கிக் குண்டு. அது திருவாட்டி சோஃபியாவின் கணவர் 47 வயது திரு பீட்டர் வெண்டலின் வலது கால் தொடையில் பாய்ந்தது.
அன்று பிராக் நகரின் சார்ல்ஸ் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டு அதில் 25 பேர் காயமுற்றதில் திரு வெண்டலும் ஒருவர்.
அந்தத் துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர். அதன்பின் காவல்துறையினர் துப்பாக்கிக்காரனை நெருங்கும் தறுவாயில் அந்த மாணவர் தன்னையும் சுட்டுக்கொண்டு இறந்தார்.
இதன் தொடர்பில் பிராக் ஹோட்டல் ஒன்றிலிருந்து சனிக்கிழமை (டிசம்பர் 30ஆம் தேதி) வாட்ஸ்அப் செயலி வழி தொலைபேசியில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளருடன் பேசிய 40 வயது திருவாட்டி சோஃபியா, அது தமது குடும்பத்துக்கு ஓர் அதிர்ச்சிதரும் சம்பவம் என்று கூறினார்.
“கொவிட் கொள்ளைநோய் காரணமாக எனது கணவர் அவரது குடும்பத்தினரைச் சந்திக்க முடியாமல் இருந்தது. அதனால், ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு பின்னர் அங்கிருந்து நெதர்லாந்தில் என் கணவரின் குடும்பத்தாருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடலாம் என்றிருந்தோம்.
“இள வயதில் பிராக் நகருக்குப் பயணம் மேற்கொண்டுள்ள எனது கணவர் அது மிகவும் அழகான நாடு என்பார். அதனால் இங்கு (பிராக் நகருக்கு) வரவேண்டும் எனப் பல நாள்களாக எண்ணம் கொண்டிருந்தேன். இப்படியொரு சம்பவம் நடக்கும் என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை,” என்று திருவாட்டி சோஃபியா கூறினார்.