சோல்: வேவு பார்ப்பதற்காக மூன்று புதிய செயற்கைக்கோள்களைப் பாய்ச்ச இருப்பதாக வடகொரியா சூளுரைத்துள்ளது. அதுமட்டுமல்லாது, ஆளில்லா வானூர்திகளைக் தயாரிக்கப்போவதாகவும் 2024ல் அணுவாயுத ஆயுதங்களை அதிகரிக்கப்போவதாகவும் அது கூறியது.
அமெரிக்காவின் கொள்கைகள் போரைத் தவிர்க்க முடியாத சூழ்நிலையை ஏற்படுத்துவதாக வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் தெரிவித்ததாக வடகொரிய அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகம் டிசம்பர் 31ஆம் தேதியன்று தெரிவித்தது.
வடகொரியாவில் நடைபெற்ற ஐந்து நாள் அரசாங்கக் கூட்டத்தில் திரு கிம், வடகொரியாவுக்கான 2024ஆம் ஆண்டு பொருளியல், ராணுவ, வெளியுறவு இலக்குகளை முன்வைத்தார்.
வடகொரியா மீது போர் தொடுத்துக் கைப்பற்ற எதிரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கொரியத் தீபகற்பத்தில் எந்நேரமும் போர் வெடிக்கக்கூடும் என்றும் திரு கிம் கூறியதாக வடகொரிய ஊடகம் தெரிவித்தது.
வடகொரியா மீது போர் தொடுக்கப்பட்டால் தென்கொரியா முழுவதையும் தாக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று வடகொரிய ராணுவத்துக்கு திரு கிம் உத்தரவிட்டார். தென்கொரியாவுக்கு எதிராக அணுவாயுதத் தாக்குதல் நடத்தவும் தயாராக இருக்க வேண்டும் என்றார் அவர்.