பேங்காக்: இரு நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா விசாக்களை தாய்லாந்தும் சீனாவும் நிரந்தரமாக இலவசமாக மாற்ற இணக்கம் கண்டுள்ளன.
இந்த புது நடவடிக்கை மார்ச் மாதம் முதல் நடப்புக்கு வரும் என்று தாய்லாந்து பிரதமர் சிரேத்தா தவிசின் செவ்வாய்க்கிழமை அன்று தெரிவித்தார்.
தென்கிழக்காசியாவின் இரண்டாவது பெரிய பொருளியலாக விளங்கும் தாய்லாந்து சுற்றுலாத்துறையை பெரிதும் சார்ந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சீன நாட்டவர்களுக்கு சுற்றுலா விசா இலவசம் என்று பேங்காக் அறிவித்திருந்தது.
இலவச விசா திட்டம் அடுத்த மாதத்துடன் முடியவிருந்தநிலையில் தற்போது இருநாடுகளும் நிரந்தரமாக விசா இலவசம் என்று அறிவித்துள்ளன.
இந்த புது நடவடிக்கை இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் வலுசேர்க்கும் என்று தவிசின் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டு 28 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்து சென்றனர். அதன் மூலம் தாய்லாந்துக்கு 46 பில்லியன் வெள்ளி வருவாய் கிடைத்ததாக அந்நாட்டு அரசாங்கத் தரவுகள் தெரிவித்தன.
ஆக அதிகமாக மலேசியாவில் இருந்து மட்டும் 4.5 மில்லியன் பயணிகள் தாய்லாந்துக்குச் சுற்றுலா சென்றனர். அதற்கு அடுத்த நிலையில் 3.5 மில்லியன் பயணிகளுடன் சீனா உள்ளது.
கொவிட்-19 காலத்திற்கு முன்னர் ஆண்டுக்கு 39 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை தாய்லாந்து ஈர்த்தது. அவர்களில் 11 மில்லியன் பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள்.