ஜெருசலம்: காஸாவின் தெற்குப் பகுதியில் ஹமாசுக்கு எதிராக இஸ்ரேலியப் படைகள் போர் விமானங்கள், கவச வாகனங்களைக் கொண்டு தாக்குதல்களை நடத்துகின்றன.
போரிட்டு வரும் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்ளப்போவதாக இஸ்ரேல் அண்மையில் தெரிவித்திருந்தது.
ஆனால், தாக்குதல்களை இஸ்ரேலியப் படைகள் தீவிரப்படுத்தியுள்ளதாக தென்காஸாவில் இருக்கும் மக்கள் முறையிட்டுள்ளனர்.
இதற்கிடையே, போர் மேலும் பல மாதங்களுக்குத் தொடரும் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
காஸாவில் நடந்துவரும் போரின் காரணமாக அந்த இடத்தின் பெரும்பாலான பகுதி அழிந்துவிட்டது.
அங்குள்ள 2.3 மில்லியன் மக்கள் கடும் நெருக்கடிநிலையை எதிர்நோக்குகின்றனர்.
இந்நிலையில், போர் அணுகுமுறையை மாற்ற இருப்பதாக இஸ்ரேல் கூறியது.
காஸாவில் போரிடும் படைகளை மீட்டுக்கொண்டு குறிப்பிட்ட பகுதிகளைக் குறிவைத்து அதிரடி நடவடிக்கைகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்தது.
இது பல மாதங்களுக்கு நீடிக்கும் என்று அது கூறியது.
இந்த அணுகுமுறையின் வழி, போர்க்காலத் தயார்நிலை வீரர்கள் வீடு திரும்ப முடியும் என்று இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது.
இதன்மூலம் வடஇஸ்ரேலில் லெபனானுடனான எல்லைப் பகுதியில் ஹிஸ்புல்லா அமைப்புடன் போரிட கூடுதல் வீரர்களை அனுப்ப முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்க்காலத் தயார்நிலை வீரர்கள் வீடு திரும்பி, தங்கள் வழக்கமான வாழ்க்கைமுறைக்குத் திரும்புவதால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியப் பொருளியலுக்கு அது நிவாரணத்தைத் தரும் என்றும் இஸ்ரேலிய அரசாங்கம் கூறியது.