கோலாலம்பூர்: ஜோகூர் மாநிலத்தில் உள்ள வர்த்தக வட்டாரமான இஸ்கந்தர் மலேசியாவை சிங்கப்பூருடன் இணைந்து மலேசிய அரசாங்கம் சிறப்பு பொருளியல் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று ஜோகூர் முன்மொழிந்துள்ளது. அதற்காக மலேசிய அரசாங்கத்திடம் ஜோகூர் அரசு தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இருப்பினும் ஜோகூரின் விருப்பத்தை மலேசிய அரசாங்கம் ஏற்குமா, சிங்கப்பூருடன் இது குறித்து அது கலந்துரையாடல் நடத்துமா என்பது பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.
வரும் ஜனவரி 11ஆம் தேதி ஜோகூர் - சிங்கப்பூர் இடையில் சிறப்பு பொருளியல் மண்டலம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்கந்தர் பகுதி சிறப்பு பொருளியல் மண்டலத்திற்கு எப்போதுமே தகுதியான ஒன்று என்று ஜோகூர் மாநிலத்தின் முதலீடு, வர்த்தகப் பிரிவுக்கான தலைவர் லீ திங் ஹான் கூறினார்.
தென் ஜோகூரில் உள்ள இஸ்கந்தர் பகுதி 2006ஆம் ஆண்டு முதல் வர்த்தக வட்டாரமாக மாறியுள்ளது. கிட்டத்தட்ட சிங்கப்பூர் நிலப்பரப்பை விட அளவில் மூன்று மடங்கு பெரிதாக இருக்கும் இஸ்கந்தரில் பாசிர் கூடாங், கூலாய், செடினாக் போன்ற வட்டாரங்கள் உள்ளன.
2006ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை இஸ்கந்தர் வட்டாரம் 153.4 பில்லியன் ரிங்கிட் (S$44 பில்லியன்) வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துள்ளது. தரவு நிலையங்கள், மருந்து நிறுவனங்கள், உணவு பதப்படுத்தும் ஆலைகள், மின் மற்றும் மின்னணுவியல் தயாரிப்பு நிறுவனங்கள் எனப் பல நிறுவனங்கள் அங்கு செயல்படுகின்றன.
சீனாவுக்கு அடுத்து அங்கு அதிக அளவில் முதலீடு செய்துள்ளது சிங்கப்பூர்.
கொவிட்-19 காலகட்டத்தில் நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டிருந்ததால் இஸ்கந்தரால் எப்போது போல் முதலீடுகளை ஈர்க்கமுடியவில்லை. இருப்பினும் 2023ஆம் ஆண்டின் முடிவில் முதலீடுகள் அதிகரித்ததாக திரு லீ கூறினார்.