வாஷிங்டன்: யுனைடெட் ஏர்லைன்ஸ், அலாஸ்கா ஏர்லைன்ஸ் ஆகியவற்றின் போயிங் 737 மேக்ஸ் விமானங்களில் பாகங்கள் இறுக்கமாக இல்லாமல் ஆட்டம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்தத் தகவலால் போயிங் நிறுவனத்தின் மீதான நெருக்கடி அதிகரித்துள்ளது. திங்கட்கிழமை (ஜனவரி 8)அதன் பங்குகள் 8 விழுக்காடு சரிந்தது.
அண்மையில் அலாஸ்கா ஏர்லைன்சின் போயிங் விமானம் ஒன்று புறப்பட்ட கொஞ்ச நேரத்தில் அதன் கதவுகளில் ஒன்று நடுவானில் பெயர்ந்து விழுந்ததால் விமானம் அவசரமாகத் தரையிறங்க வேண்டியிருந்தது.
இச்சம்பவத்திற்குப் பிறகு 171 போயிங் மேக்ஸ் 9 ரக விமானங்கள் சேவை வழங்கக்கூடாது என்று அமெரிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் திங்கட்கிழமை அன்று அலாஸ்கா ஏர்லைன்ஸ், தான் சோதித்த சில போயிங் 737 மேக்ஸ் விமானங்களில் பாகங்கள் இறுக்கமாக இல்லை என்று கூறியுள்ளது.
தற்போது அந்த நிறுவனம் போயிங் மற்றும் அமெரிக்க விமான வாரியத்தின் ஆவணங்களுக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளது. அதன் பின்னர் உரிய விசாரணை தொடங்கப்படும் என்று அது கூறியது.
யுனைடெட் ஏர்லைன்சின் 10 விமானங்களில் இதேபோன்ற பிரச்சினைகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளதாக போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.