கோலாலம்பூர்: எல்ஆர்டி 3க்கான கட்டுமானப் பணிகள் 91.86 விழுக்காடு நிறைவடைந்துவிட்டதாக மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.
எல்ஆர்டி 3ன் முதல் கட்டப் பாதைக்கான பணிகளை 2025ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதிக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்டதால் இந்த இலக்கை எட்ட முடியும் என்றார் திரு லோக்.
இந்தப் பாதையில் 20 நிலையங்கள் இடம்பெறும். அவை ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, ஜோகூர் பாருவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான விரைவு ரயில் சேவைத் திட்டம் குறித்து பேசிய திரு லோக், கடந்த ஆண்டு இறுதி நிலவரப்படி மலேசியத் தரப்பில் கட்டுமானப் பணிகள் 65 விழுக்காடு நிறைவடைந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
விரைவு ரயில் சேவைப் பாதையை 2026ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டிருப்பதாக அமைச்சர் லோக் கூறினார்.