நேப்பிடா: மியன்மாரின் ராணுவ ஆட்சித் தலைவர் மின் ஆங் ஹ்லெய்ங், ஆசியான் சிறப்புத் தூதரைச் சந்தித்துள்ளார்.
மியன்மாரின் அரசாங்க ஊடகம், ஜனவரி 11 ஆம் தேதி, அந்தத் தகவலை வெளியிட்டது.
சிறப்புத் தூதர் அலவுன்கியோ கிட்டிகூன், மியன்மார் தலைநகர் நேப்பிடாவில் ராணுவ ஆட்சித் தலைவரைச் சந்தித்தார்.
இரு தலைவர்களும் நாட்டில் அமைதி, நிலைத்தன்மையை நிலைநாட்டவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் மியன்மார் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்துக் கலந்துரையாடியதாக அரசாங்க ஊடகம் தெரிவித்தது.
மியன்மாரில் அமைதி முயற்சிகளை ஊக்குவிக்கும் லாவோஸ், ஆசியான் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
2021ஆம் ஆண்டு மியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்ததன் பிறகு, அந்நாட்டில் தொடர்ந்து வன்செயல்கள் இடம்பெற்றன. ராணுவம் அத்தகைய வன்செயல்களை நிறுத்த வேண்டும் என்றும் அமைதி உடன்படிக்கையின் ஐந்து அம்சங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஆசியான் வலியுறுத்தி வந்துள்ளது. ஆனால் அது பலிக்கவில்லை.
அண்மையில் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் ஜனநாயக உரிமை கோரி ராணுவத்திற்கு எதிராக சண்டையிட்டதை அடுத்து வன்செயல்கள் தீவிரமடைந்தன. சீன எல்லையில் உள்ள வர்த்தக நகரம் உள்ளிட்ட சில பகுதிகளை அவர்கள் கைப்பற்றினர்.
ஆசியான் அமைப்பு, மியன்மார் ராணுவ ஜெனரல்கள் உயர்நிலை ஆசியான் கூட்டங்களில் கலந்துகொள்ளத் தடை விதித்துள்ளது. இருப்பினும் ராணுவ ஆட்சியாளர்களுடன் அது உறவைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.