காஸா: காஸாவில் இனப்படுகொலையில் ஈடுபட்டதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கு எதிராக, ஜனவரி 11ஆம் தேதி, அனைத்துலக நீதிமன்றத்தில் தனது தரப்பைத் தற்காத்துக்கொள்ள இஸ்ரேல் தயாராக உள்ளது.
இஸ்ரேலில் வலதுசாரி அமைச்சர்கள் சிலர் காஸா வட்டாரத்தை நிரந்தரமாக ஆக்கிரமிக்க வேண்டுமென்று அழைப்பு விடுத்திருந்தனர். இஸ்ரேலியப் பிரதமர் பென்யமின் நெட்டன்யாஹு முதல்முறையாக, வெளிப்படையாக அதை நிராகரித்துள்ளார்.
நிதியமைச்சர், தேசியப் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்டோர் பாலஸ்தீனர்கள் காஸாவிலிருந்து நிரந்தரமாக வெளியேற வேண்டும் என்றும் இஸ்ரேலிய மக்கள் அங்கு குடியேற வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
ஆனால், “ சில அம்சங்களை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். காஸா வட்டாரத்தை நிரந்தரமாக ஆக்கிரமிக்கும் எண்ணம் இஸ்ரேலுக்கு இல்லை. அங்குள்ள பொதுமக்களை வெளியேற்றும் எண்ணமும் இல்லை,” என்று திரு நெட்டன்யாஹு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம், காஸாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுவதாக தென்னாப்பிரிக்கா குற்றம் சாட்டியது.
ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் மீதான இஸ்ரேலின் போர், 1948ஆம் ஆண்டின் இனப்படுகொலை உடன்படிக்கையை மீறிய நடவடிக்கை என்று அது கூறியது.
அதுகுறித்து, ஜனவரி 11, 12ஆம் தேதிகளில் ‘த ஹேக்’கில் உள்ள உலக நீதிமன்றம் விசாரிக்கவிருக்கிறது.
இதன் தொடர்பில் ஜனவரி 10ஆம் தேதி இஸ்ரேலிய அரசாங்கப் பேச்சாளர், “ தென்னாப்பிரிக்கா சுமத்தியுள்ள மோசமான குற்றச்சாட்டை அனைத்துலக நீதிமன்றத்தில் எதிர்கொண்டு இஸ்ரேல் பொய் என நிரூபிக்கும். தென்னாப்பிரிக்கா இந்த வகையில் ஹமாஸ் தரப்பிற்கு அரசியல், சட்ட ரீதியான பாதுகாப்பைத் தர விழைகிறது,” என்று கூறினார்.
காஸாவில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தும்படி இஸ்ரேலுக்கு உத்தரவிட வேண்டும் என்று தென்னாப்பிரிக்கா கோருகிறது. கொலம்பியாவும் பிரேசிலும் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.