நியூயார்க்: 2023 புத்தாண்டு பிறக்கவிருந்த வேளையில் அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கம் அருகே நான்கு காவல்துறை அதிகாரிகளை வெட்டுக்கத்தியால் தாக்கிய குற்றத்தை 20 வயது ஆடவர் ஒப்புக்கொண்டுள்ளார். 2022 டிசம்பர் 31ஆம் தேதி இரவில் தாக்குதலை நடத்தியபோது டிரவோர் பிக்ஃபோர்ட் எனப்படும் அந்த ஆடவரின் வயது 19.
இச்சம்பவம் ஜிகாத்தால் ஊக்குவிக்கப்பட்டு, அமெரிக்க அரசாங்க அதிகாரிகளை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்று அமெரிக்காவின் தலைமைச் சட்ட அதிகாரி கூறியிருந்தார்.
தாக்கப்பட்ட அதிகாரிகள் நியூயார்க் நகர காவல்துறையைச் சேர்ந்தவர்கள். அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை.
மான்ஹாட்டனில் உள்ள டைம்ஸ் சதுக்கம் அருகே புத்தாண்டைக் கொண்டாட திரண்டிருந்த கூட்டத்தில் நள்ளிரவுக்கு சற்று முன்னர் தாக்குதல் நடத்துவது அந்த ஆடவரின் திட்டம். அதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தான் சென்று தலிபான் இயக்கத்துடன் இணையவும் அவர் முடிவு செய்திருந்ததாக அதிகாரிகள் கூறினர்.
மூன்று கொலை முயற்சி குற்றச்சாட்டுகளையும் மூன்று தாக்குதல் குற்றச்சாட்டுகளையும் வியாழக்கிழமை (ஜனவரி 11) அவர் ஒப்புக்கொண்டார். அவருக்கான தண்டனை ஏப்ரலில் விதிக்கப்படும் என நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.