தைப்பே: தைவானின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு லாய் சிங்-தே, 64, சீனாவுடன் மோதல் போக்கைத் தவிர்க்கும் நோக்கில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனவரி 13ஆம் தேதி தைவானில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவியது. அதில் 40 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று திரு லாயின் ஆளும் ஜனநாயக முன்னேற்றக் கட்சி வெற்றிபெற்றது.
1996ஆம் ஆண்டு தைவானில் தேர்தல் அறிமுகமானது முதல், இதுவரை வேறு எந்தக் கட்சியும் தொடர்ந்து இரண்டாவது தவணையில் ஆட்சியில் நீடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பேச்சுக்கு அழைப்பு விடுத்த அதேவேளையில் சீனாவின் மிரட்டல்களிலிருந்து தைவானுக்குப் பாதுகாப்பு தேவை என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
“தடைகளுக்குப் பதில் பரிமாற்றத்தையும் மோதலுக்குப் பதில் பேச்சுவார்த்தையையும் மேற்கொள்ளும் வேளையில் சீனாவுடனான பரிமாற்றங்கள், ஒத்துழைப்பை உறுதியுடன் மேற்கொள்வோம்,” என்று தேர்தல் வெற்றியைக் கொண்டாடக் கூடியிருந்த ஆதரவாளர்களிடம் திரு லாய் கூறினார்.