தைவான் அதிபர் தேர்தலில் ஆளும் கட்சியான ஜனநாயக முன்னேற்றக் கட்சியின் வேட்பாளர் லாய் சிங்-டே மும்முனைப் போட்டியில் வெற்றிபெற்று உள்ளார்.
அவரை எதிர்த்துக் களமிறங்கிய தைவானின் ஆகப்பெரிய எதிர்க்கட்சியான கேஎம்டி-யின் வேட்பாளர் ஹாவ் யு-யி கிட்டத்தட்ட 2.7 மில்லியன் வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இவர் சீனாவின் ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டவர் என்று நம்பப்படுகிறது.
மற்றொரு போட்டியாளரான தைப்பே நகர முன்னாள் மேயர் கோ வென்-ஜெயும் தோற்றுப்போனார். அவருக்குக் ஏறக்குறைய 2 மில்லியன் வாக்குகள் கிடைத்தாக தைவானிய ஊடகங்கள் குறிப்பிட்டன. 2019ஆம் ஆண்டு உதயமான தைவான் மக்கள் கட்சி என்னும் சிறிய கட்சியின் வேட்பாளர் அவர்.
எதிர்த்துப் போட்டியிட்ட இருவரும் தோல்வியை ஏற்றுக்கொண்டனர்.
ஏறக்குறைய 23.57 மில்லியன் மக்கள்தொகை கொண்ட தைவானின் அதிபர் தேர்தல் சனிக்கிழமை (ஜனவரி 13) நடந்தது. வாக்குப்பதிவு நிறைவுற்றதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
தொடக்கம் முதலே லாய் முன்னணியில் இருந்து வந்தார்.
தற்போதைய துணை அதிபரான லாய், அதிபராகப் பொறுப்பேற்பது சீனாவின் எதிர்ப்பை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
தைவானின் தனித்துவத்தை ஆதரிக்கும் லாய், சீனாவின் தைவானிய ஆக்கிரமிப்பு முயற்சிகளை எதிர்த்து வருகிறார். மேலும், அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டில் விருப்பம் உள்ளவர் என்று அவர் அறியப்படுகிறார்.
இந்த அதிபர் தேர்தல் போருக்கும் அமைதிக்கும் இடையிலான வாய்ப்பு என்று சீனா ஏற்கெனவே கூறியிருந்தது. மேலும் லாய் ஒரு ‘பயங்கரமான பிரிவினைவாதி’ என்றும் அது விமர்சித்து இருந்தது.
தற்போதைய அதிபர் சாய் இங்-வென் இருமுறை அதிபராக இருந்துவிட்டதால் மூன்றாம் முறை அவர் போட்டியிட அரசியலமைப்புச் சட்டம் இடம் தரவில்லை.