இஸ்லாமாபாத்: ஈரான் நடத்திய வான்வழித் தாக்குதல் காரணமாக பாகிஸ்தானில் இரண்டு சிறுவர்கள் மாண்டதாகவும் மூவர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தானிய வெளியுறவு அமைச்சு ஜனவரி 17ஆம் தேதியன்று தெரிவித்தது.
எவ்வித தூண்டுதலும் இன்றி பாகிஸ்தான் மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பதாக அமைச்சு குறைகூறியது.
இதுகுறித்து, பாகிஸ்தானுக்கான ஈரானியத் தூதரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் பாகிஸ்தானின் எந்தப் பகுதியில் நடத்தப்பட்டது என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் ஈரானிய எல்லைப் பகுதிக்கு அருகில் உள்ள பலுசிஸ்தான் மாநிலத்தில் வெடிப்புகள் நிகழ்ந்ததாக சமூக ஊடகங்கள் வழி பாகிஸ்தானியர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
“பாகிஸ்தானின் இறையாண்மைக்கு எதிராக ஈரான் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையை ஏற்க முடியாது. இதனால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படக்கூடும்,” என்று பாகிஸ்தானிய வெளியுறவு அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ஈரான் கருத்து தெரிவிக்கவில்லை.