பேங்காக்: பாம்பு என்றால் படையே நடுங்கும் என்று சொல்வார்கள். விமானப் பயணிகளுக்கு இந்த நிலை ஏற்பட்டால் சொல்லவா வேண்டும்.
தாய்லாந்து தலைநகர் பேங்காக்கிலிருந்து புக்கெட்டுக்குச் சென்றுகொண்டிருந்த ஏர் ஏஷியா விமானத்தில் பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதைப் பார்த்து பயணிகள் பீதி அடைந்தனர்.
பயணி இருக்கைகளுக்கு மேல் பெட்டிகளை வைப்பதற்கான இடத்தில் பாம்பு ஊர்ந்து சென்றது.
இதைக் காட்டும் டிக்டாக் காணொளி இணையத்தில் காட்டுத் தீயைப் போல பரவியது.
ஜனவரி 16ஆம் தேதி பிற்பகல் நிலவரப்படி கிட்டத்தட்ட 3.4 மில்லியன் பேர் அந்தக் காணொளியைப் பார்த்தனர்.
அந்தப் பாம்பைக் காலி தண்ணீர் புட்டியைப் பயன்படுத்திப் பிடிக்க விமானச் சிப்பந்தி ஒருவர் முயன்றதைக் காணொளியில் காண முடிந்தது.
பிறகு அந்தக் காலி தண்ணீர் புட்டியைப் பயன்படுத்தி குப்பைப் பை ஒன்றுக்குள் அந்தப் பாம்பு தள்ளப்பட்டது.
புக்கெட் அனைத்துலக விமான நிலையத்தில் அந்த ஏர் ஏஷியா விமானம் தரையிறங்க இருந்தபோது அந்தப் பாம்பைப் பயணிகள் பார்த்ததாகக் கூறப்படுகிறது.
விமானம் தரையிறங்கியதும் பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தைச் சோதனையிட்டனர்.
விமானத்தில் வேறு பாம்புகள் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.