ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு 4,000க்கும் அதிகமான வர்த்தகக் குற்றங்கள் பதிவானதாகவும் அவற்றின் காரணமாக 267 மில்லியன் ரிங்கிட் ($76,079,940) இழப்பு ஏற்பட்டதாகவும் ஜோகூர் காவல்துறை ஆணையர் கமருல் ஸமான் மமாட் தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் வர்த்தகக் குற்றங்கள் தொடர்பாக ஜோகூர் காவல்துறையிடம் அளிக்கப்பட்ட புகார்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு இருமடங்கு அதிகம் என்று அவர் கூறினார்.
2022ஆம் ஆண்டில் 1,462 வர்த்தகக் குற்றங்கள் பதிவாகின.
கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 2,921ஆக அதிகரித்தது.
வர்த்தகக் குற்றங்களால் ஏற்பட்ட இழப்பு 4 விழுக்காடு அதிகரித்ததாக திரு கமருல் ஸமான் கூறினார்.
இணையம் வழி வர்த்தக மோசடி, முதலீட்டு மோசடி, வேலை தொடர்பான மோசடி, கடன் மோசடி ஆகியவை ஆக அதிகமாக நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
வர்த்தகக் குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த அரசாங்க அமைப்புகள், தனியார் நிறுவனங்கள், அரசு சார்பற்ற அமைப்புகள் ஆகியவற்றுடன் ஜோகூர் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத்துறை இணைந்து செயல்படும் என்று திரு கமருல் ஸமான் தெரிவித்தார்.