தன் பணிமனையை கார்கள் மறைத்துக்கொண்டிருந்ததால்,மலேசிய நாட்டைச் சேர்ந்த திரு ஹசன் அல் ரசாக், பளுதூக்கி ஒன்றை வைத்து அவற்றை அப்புறப்படுத்தினார்.
இந்தச் சம்பவத்தின் தொடர்பில், ஞாயிற்றுக்கிழமை ( ஜனவரி 21) டிக் டாக் சமூக ஊடகத்தில் அவர் நான்கு நிமிடக் காணொளி ஒன்றை வெளியிட்டார்.
காணொளியில், சிலாங்கூர் மாநிலத்தில் பத்து மலைக்கு அருகில் உள்ள அவருடைய பணிமனையின் நுழைவாயிலில், மூன்று கார்கள் நிறுத்தப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.
மேலும், “உங்களைப் பத்து மலைக்கு வரவேற்கிறேன். ஆனால் தயவு செய்து என் பணிமனையின் நுழைவாயிலில் உங்கள் வாகனங்களை நிறுத்தாதீர்கள். நான் என் தொழிலை நடத்த வேண்டும்,” என்று அதில் கூறியுள்ளார்.
நகர்த்தப்பட்ட கார்கள், சாலையின் மறுபுறத்தில் நிறுத்தப்பட்டன.
வழக்கத்திற்கு மாறான இந்த நடவடிக்கையைப் பார்த்த வழிப்போக்கர்கள் குழப்பமடைந்தனர்.
ஆனால் இணையவாசிகள் திரு ஹசனின் செயலைப் பாராட்டினர்.
சிலர், ஓட்டுநர்களின் சுயநலமான செயல்களின் விளைவுகளை அவர் சுட்டிக்காட்டுவதாகக் கூறினார்.
வேறு சிலர், இத்தகைய சுயநலவாதிகளைச் சமாளிக்க இதே வழியைப் பின்பற்ற விரும்புவதாகக் கூறுகிறார்கள்.
பளுதூக்கியால் நகர்த்தப்படும் வாகனங்கள் சேதமடைந்துவிடும் என்று சிலர் ஐயம் எழுப்பினர். முடிந்த அளவு வாகனங்கள் மெதுவாக நகர்த்தப்படுகின்றன என்று திரு ஹசன் அவர்களுக்குப் பதிலளித்தார்.