சிட்னி: ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் ஜனவரி 25ஆம் தேதி இரவு சூறாவளி கிர்ரிலி கரையைக் கடந்தது.
இதன் விளைவாக கனமழை பெய்ததுடன் பலத்த காற்றும் வீசியது.
சூறாவளி ஏற்படுத்திய சேதம் காரணமாக அந்த மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ஜனவரி 26ஆம் தேதியன்று மின்சாரமின்றித் தவித்தனர்.
சுற்றுப்பயணிகளிடையே பிரபலமான டவுன்ஸ்வில் நகரம் அதிகம் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட 53,000 வாடிக்கையாளர்கள் மின்சாரமின்றி தவித்ததாக எர்கோன் எனர்ஜி நிறுவனம் தெரிவித்தது.
அவர்களில் பெரும்பாலானோர் டவுன்ஸ்வில் நகரைச் சேர்ந்தவர்கள் என்று அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் எமா ஒலிவேரி கூறினார்.
சேதம் குறித்த விரிவான ஆய்வு நடத்தப்பட இருப்பதாகவும் மின்சார விநியோகம் எப்போது வழக்கநிலை திரும்பும் என்று இப்போதைக்குச் சொல்ல இயலாது என்றும் அவர் தெரிவித்தார்.
கிர்ரிலி புயல் காரணமாக ஜனவரி 26ஆம் தேதியன்று குவீன்ஸ்லாந்தின் வடக்குப் பகுதியில் கனமழை பெய்யும் என்றும் மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் ஆஸ்திரேலிய வானிலை மையம் முன்னுரைத்துள்ளது.