குவான்டனாமோ பே, கியூபா: அல்-காய்தா இயக்கத்துடன் சேர்ந்து பாலித் தீவில் 2002ஆம் ஆண்டு நிகழ்ந்த பயங்கரவாத குண்டு வெடிப்புக்கு சதித் திட்டம் தீட்டியவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட மலேசியர்கள் இருவரின் சிறைத் தண்டனையை மேலும் ஐந்து ஆண்டுகள் நீட்டித்து குவான்டனாமோ பே ராணுவ நடுவர் மன்றம் ஜனவரி 26ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது.
அந்தக் குண்டு வெடிப்பில் மொத்தம் 202 பேர் கொல்லப்பட்டனர். இருப்பினும் அவர்கள் இருவரும் ரகசிய உடன்படிக்கை மூலமாகவும் தண்டனை குறைப்பு மூலமாகவும் 2029ல் விடுதலை செய்யப்படலாம் என்றும் அறியப்படுகிறது.
முகம்மது ஃபாரிக் அமின், முகம்மது நசிர் லெப் இருவரும் 2003 முதல் அமெரிக்காவால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கடந்த வாரம் தங்கள் மீது சுமத்தப்பட்ட போர்க் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்.
கடந்த வாரம் நடைபெற்ற ராணுவ நடுவர் மன்ற விசாரணையை நேரில் காண, குண்டுவெடிப்பில் மரணமுற்றவர்களின் உறவினர்கள் பலர் வந்திருந்தனர்.
அமெரிக்க ராணுவ அதிகாரிகள் ஐவர் கொண்ட நடுவர் மன்றம், குற்றவாளிகள் இருவருக்கு 20 முதல் 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பது பற்றி முடிவெடுக்க ஜனவரி 26ஆம் தேதி கூடினர். சுமார் இரண்டு மணி நேர விவாதத்துக்குப் பிறகு அவர்கள் இருவருக்கும் 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.