மணிலா: பிலிப்பீன்ஸ் அரசாங்கத் துருப்பினர், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதக் குழுவிற்கு ஆதரவாகச் செயல்படும் ‘தௌலா இஸ்லாமியா’ போராளிகள் குழுவைச் சேர்ந்த ஒன்பது பேரைச் சுட்டுக் கொன்றனர்.
அவர்களில் இருவர் சென்ற டிசம்பர் மாதம் மராவியில் நடந்த குண்டு வெடிப்புத் தாக்குதலில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படுபவர்கள். பல்கலைக்கழக உடற்பயிற்சிக் கூடத்தில் கத்தோலிக்க வழிபாட்டின்போது அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
பிலிப்பீன்ஸ் ராணுவம், ஜனவரி 27ஆம் தேதி இந்தத் தகவல்களை வெளியிட்டது.
ஜனவரி 25, 26ஆம் தேதிகளில் லானோ டெல் சுர் மாகாணத்தில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அது குறிப்பிட்டது.
அந்த நடவடிக்கையின்போது ராணுவ வீரர்கள் நால்வர் காயமடைந்ததாகவும் அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் பிலிப்பீன்ஸ் ராணுவம் கூறியது.
“இந்த நடவடிக்கையில் ராணுவ வீரர்கள் வெளிப்படுத்திய உறுதியான அர்ப்பணிப்பும் துல்லியமான செயல்பாடும் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு விரைவாக நீதி கிடைக்க வழிவகுத்தது,” என்று பிலிப்பீன்ஸ் ராணுவத் தலைவர் ஜெனரல் ரோமியோ பிராவ்னர் கூறினார்.
நாட்டு மக்களின் உயிருக்கும் நலத்திற்கும் தீங்கு விளைவிப்போரை பிலிப்பீன்ஸ் ஆயுதப் படை சகித்துக்கொள்ளாது என்பதை இந்த நடவடிக்கை தெளிவாக எடுத்துரைப்பதாக அவர் குறிப்பிட்டார்.